10 மணி நேர விசாரணைக்குப் பின்னர் 'ரிலீஸ்' செய்யப்பட்ட அழகிரி மருமகன்!
மதுரை: மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி எங்கே பதுங்கியிருக்கிறார் என்பதை அறிவதற்காக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட துரை தயாநிதியின் அக்காள் கணவர் வெங்கடேஷை 10 மணி நேரம் துருவித் துருவி விசாரித்த மதுரை போலீஸார் பின்னர் விடுவித்தனர்.
மதுரையில் கிரானைட் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரில், கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த முறைகேடு தொடர்பாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதியின் பெயரையும் போலீஸார் சேர்த்துள்ளனர். இதையடுத்து அவர் முன்ஜாமீன் கோரினார். ஆனால் அக்கோரிக்கையை மதுரை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இதையடுத்து துரையைப் பிடிக்க போலீஸார் தீவிரமாக முயன்று வருகின்றனர். தற்போது அவரது உறவினர்களைப் பிடித்து விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். துரை தயாநிதியின் அக்காள் கயல்விழியின் கணவர் வெங்கடேஷை தனிப்படை போலீஸார், சென்னையிலிருந்து மதுரைக்கு அழைத்து வந்தனர்.
அவரை நேற்று எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து காலை முதல் விசாரிக்க ஆரம்பித்தனர். இரவு வரை இந்த விசாரணை நீண்டது. கிட்டத்தட்ட 10 மணி நேரம் இடைவிடாமல் வெங்கடேஷை போலீஸார் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் இரவில் அவரை விடுவித்தனர். மு.க.அழகிரியின் மருமகனை பத்து மணி நேரம் வைத்து விசாரித்ததால் மதுரையில் திமுகவினர் மத்தியி்ல் பரபரப்பு நிலவியது.