வக்கீல் பீஸை மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பலியானோர் குடும்பத்துக்கு அளித்த கசாப் வக்கீல்கள்
கசாப்புக்காக ஆஜரான ராஜு ராமச்சந்திரன், கெளரவ் அகர்வால் ஆகிய இருவரும் கசாப்புக்காக ஆஜராகியதற்காக தங்களுக்குத் தரப்பட்ட வக்கீல் பீஸை அப்படியே மும்பை தீவிரவாதத் தாக்குதலின்போது தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடி உயிர் நீத்த மும்பை போலீஸாரின் குடும்பத்தினருக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் வக்கீல் கட்டணமாக ரூ. 14.5 லட்சம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கசாப்புக்கு மும்பை தனி நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இது பின்னர் பாம்பே உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யயப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் போனான் கசாப். ஆனால் அவனுக்காக வாதாட எந்த வக்கீலும் முன்வரவில்லை. இதையடுத்து உச்சநீதிமன்றமே கசாப்புக்காக வாதாட ராஜு ராமச்சந்திரனை நியமித்தது. கூடவே அகர்வாலையும் வக்கீலாக அமர்த்தியது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் வாதிட வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக இந்த இரு வக்கீல்களையும் அமர்த்தியது உச்சநீதிமன்றம்.
இருவரும் கசாப்புக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடி, அவனது இளம் வயதைக் கருத்தில் கொண்டு மரண தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று வாதாடினர். ஆனால் அதை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து மரண தண்டனையை உறுதி செய்து சமீபத்தில் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில்தான் இரு வக்கீல்களும் தங்களுக்குக் கிடைத்த கட்டணத்தை மும்பையில் தீவிரவாதிகளுடன் மோதி உயிர்நீத்த காவல்துறையினரின் குடும்பங்களுக்கு அந்த நிதியை வழங்கியுள்ளனர். கசாப்புக்காக வாதாடியதற்காக ராமச்சந்திரனுக்கு ரூ. 11 லட்சமும், அகர்வாலுக்கு ரூ. 3.5 லட்சமும் கட்டணமாக கிடைத்தது.
தங்களது முடிவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு இரு வக்கீல்களும் அறிவித்தபோது நீதிபதிகள் அவர்களை பாராட்டினர். மேலும் இந்த நிதியை சமமாக பங்கிட்டு பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு விநியோகிக்குமாறு மகாராஷ்டிர மாநில அரசையும் கேட்டுக் கொள்ளப் போவதாக தெரிவித்தனர்.
மும்பையில் ஊடுறுவிய 10 பாகிஸ்தான் தீவிரவாதிகளையும் எதிர்த்து மிகக் குறைந்த அளவிலான ஆயுத பலத்துடன் தீரமாக போராடினர் மும்பை போலீஸார். அவர்களில் மிக முக்கியமானவர் துக்காராம். இவர்தான் கசாப்பை உயிருடன் பிடிக்க முக்கியக் காரணம் ஆவார். மொத்தம் 18 மும்பை போலீஸார் இந்த கோரச் சம்பவத்தில் பலியானார்கள் என்பது நினைவிருக்கலாம்.