தஞ்சாவூரில் அதிமுக கவுன்சிலரின் தம்பி வெட்டிக் கொலை
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அதிமுக கவுன்சிலரின் தம்பியை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை கீழவாசலைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவர் 27-வது வார்டு அதிமுக கவுன்சிலர். இவரது தம்பி தர்மா என்கிற போலீஸ் தர்மா (50) போலீசாக வேலை பார்த்தவர். கடந்த சில வருடங்களுக்கு வேலையில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து தற்போது இவர் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் புதன்கிழமை இரவு கீழவாசலில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு இரவு 8 மணிக்கு மேல் சீனிவாசபுரம் காமராஜ் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது மர்ம கும்பல் திடீரென அவரது மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தர்மா வண்டியை வேகமாக ஓட்டி சென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார். அந்த மர்ம கும்பல் கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவரை நெருங்கியதால் பயந்துபோன தர்மா எழுந்து ஓடினார்.
இருப்பினும் அவரை விரட்டிச்சென்ற மர்ம கும்பல் தர்மாவை சரமாரியாக வெட்டியது. இதில் அவரது முகம், தலை, கழுத்து, கைகள் உள்ளிட்ட பல இடங்களில் பயங்கர வெட்டு விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த தஞ்சை நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இதையடுத்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கு பதிந்திருந்த ரேகைகளையும், தடயங்களையும் பதிவு செய்து கொண்டனர். இதுகுறித்து தஞ்சை நகர மேற்கு பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவருகிறார்கள். போலீஸ் தர்மா நில பிரச்சினையில் வெட்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. கவுன்சிலர் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.