பி.ஆர்.பழனிச்சாமிக்கு நெஞ்சு வலியாம்.. சிறையிலிருந்து மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து அவர் பாளையங்கோட்டை சிறையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு 'ஷிப்ட்' ஆகியுள்ளார்.
மதுரை கிரானைட் மோசடியில் ஈடுபட்டு பல ஆயிரம் கோடி மக்கள் பணம், அரசு சொத்தை கொள்ளையடித்து பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன உரிமையாளர் பி.ஆர். பழனிச்சாமி கடந்த மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் மீது மதுரை மாவட்டம் மேலூர், கீழவளவு, ஒத்தக்கடை காவல் நிலையங்களில் சுமார் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந் நிலையில் நேற்று பழனிச்சாமிக்கு திடீரென நெஞ்சுவலி வந்துவிட்டது. இதையடுத்து, அவர் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து இதய நோய் நிபுணர்கள் வரழைக்கப்பட்டு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, இ.சி.ஜி., ஆஞ்ஜியோகிராம் போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனராம்.
வெடி மருந்துகள் பதுக்கல்-கிரானைட் நிறுவன ஊழியர்கள் கைது:
இந் நிலையில் கீழவளவு பகுதியில் உள்ள ஜி.ஜி.கிரானைட் நிறுவனத்தில் உரிய அனுமதி இல்லாமல் வெடி மருந்துகளை பதுக்கியதாக கீழையூரைச் சேர்ந்த குமரேசன் (24), மேலூரை அடுத்த கோட்டநத்தம்பட்டியை சேர்ந்த சரவணன் (31) ஆகியோரை கீழவளவு போலீசார் கைது செய்துள்ளனர்.