கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்க கல்லூரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: உயர்நீதிமன்றம்
சென்னை: சென்னையில் உள்ள லயோலா, ஸ்டெல்லா மேரிஸ் ஆகிய கல்லூரிகள், அரசு நியமித்த கல்வி கட்டணத்தை விட மாணவர்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் உண்மையுள்ள கத்தோலிக்க கூட்டமைப்பு சார்பில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல தமிழ்நாடு கத்தோலிக்க சிறுபான்மையினர் நல சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் சென்னை லயோலா கல்லூரியில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேற்கண்ட இரு மனுக்களையும் விசாரித்த உயர்நீதிமன்றம், இரு கல்லூரிகளும் மாணவர்களிடம் இருந்து கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இந்த இடைக்கால தடையை நீக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து இரு கல்லூரிகளின் தரப்பில் மேலும் ஒரு மனு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணத்தை மட்டும் வசூலிப்பதால், கல்லூரிக்கான அடிப்படை செலவுகளை மேற்கொள்ள சிரமப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே நீதிமன்றம் விதித்துள்ள இடைகால தடையை நீக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
ஒரே சர்ச்சை சேர்ந்த இரு பிரிவினர்கள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை பொதுநல வழக்காக கருத முடியுமா என்பதை முடிவு செய்ய, இந்த மனுக்கள் மீதான விசாரணையை வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். அதேநேரம் கல்வி கட்டணம் சம்பந்தமாக ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை மேலும் நீட்டிக்க வேண்டியதில்லை என்று கருதுவதால், அந்த தடையை நீக்குகிறோம் என்றனர்.