புதிய அமைச்சராக ப.மோகன் பதவியேற்பு: சபாநாயகர் தேர்தல்-தனபால் வேட்புமனு தாக்கல்
அமைச்சரவையிலிருந்து சி.வி.சண்முகத்தை முதல்வர் ஜெயலலிதா நீக்கினார். அவருக்குப் பதிலாக அரசு கொறடாவாக இருந்த சங்கராபுரம் தொகுதி எம்எல்ஏ ப.மோகன் ஊரக தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து இன்று அவர் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரோசய்யா அவருக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டர். பின்னர் ப.மோகன் தலைமைச் செயலகத்தில் தனது அலுவலகப் பணிகளை மேற்கொண்டார்.
இதற்கு முந்தைய ஜெயலலிதாவின் ஆட்சியிலும் மோகன் இரண்டு முறை அமைச்சராக இருந்துள்ளார்.
இப்போது தமிழக அமைச்சரவையில் ஜெயலலிதாவையும் சேர்த்து மொத்தம் 33 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.
சபாநாயகர் தேர்தல்-தனபால் வேட்புமனு தாக்கல்:
இந் நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பி.தனபால் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவைத் தலைவராக இருந்த ஜெயக்குமார் 29ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சட்டசபையின் துணை சபாநாயகராக உள்ள தனபால் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
வரும் 10ம் தேதி சபாநாயதர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தனபாலையே அதிமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தினார் முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதா, மற்றும் அமைச்சர்கள் உடன் இருந்தனர். சபாநாயகர் தேர்தலுக்கான வேட்பாளர் பெயரை அதிமுக தவிர வேறு எந்த கட்சியும் இதுவரை அறிவிக்கவில்லை.
சட்டசபையில் அதிமுகவைத் தவிர வேறு எந்த கட்சிக்கும் பலம் இல்லை என்பதால், மற்ற கட்சிகள் வேட்பாளர் பெயரை அறிவிக்க வாய்ப்பு இல்லை. எனவே தமிழக சட்டசபை புதிய சபாநாயகராக தனபால், போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது.
புதிய சபாநாயகர் பதவி ஏற்பதற்காக 10ம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. அன்று தனபால் சபாநாயகர் பொறுப்பை ஏற்பார்.
தனபால் சபாநாயகர் பொறுப்பை ஏற்பதைத் தொடர்ந்து துணை சபாநாயகர் பதவி காலியாகிறது. அந்த பதவிக்கு வேறு ஒருவர் தேர்வு செய்யப்படுவார். முதல்வர் ஜெயலலிதா, இன்னும் சில தினங்களில் புதிய துணை சபாநாயகர் யார் என்பதை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.