மதுரை டோல்கேட்டில் தேமுதிகவினர் திடீர் தகராறு- போலீசார் அடித்து விரட்டனர்
திருமங்கலம்: மதுரை திருமங்கலம் அருகே நெடுஞ்சாலை டோல்கேட்டில் தகராறில் ஈடுபட்ட தேமுதிகவினரை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்து விரட்டினர். 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூரில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த மாதம் டோல்கேட் திறக்கப்பட்டது. இங்கு திருமங்கலம் பகுதி வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று முடிவாகி அது அமலில் உள்ளது.
இந்த நிலையில், நேற்று தேமுதிக திரு்மங்கலம் நகர செயலாளரும், நகராட்சி கவுனசிலருமான ராதாகிருஷ்ணன் விருதுநகர் பதிவு எண் கொண்ட காரில் டோல்கேட் வழியாக வந்துள்ளார். டோல்கேட் ஊழியர்கள் அவரது காரை நிறுத்தி கட்டணம் செலுத்து்மாறு கூறினர். ஆனால் ராதாகிருஷ்ணன் இது திருமங்கலம் பகுதி கார்தான் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவருக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து ராதாகிருஷ்ணன் உச்சம்பட்டி ஊராட்சி தலைவர் தேமுதிகவை சேர்ந்த கார்த்திகேயன் மற்றும திருமங்கலம் வாகன சங்கத்தினரை தொடர்பு கொண்டு பிரச்சனை குறித்து தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் திரண்டு வந்தனர்.
அனைவரும் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்குவாதம் செய்தனர். அப்போது திடீரென அவ்ர்கள் டோல்கேட்டை அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து கைது செய்ய முயன்றனர்.
அப்போது தள்ளுமுள்ளு ஏற்படவே போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மறியலில் ஈடுபட்ட தேமுதிக நகர செயலாளர் ராதாகிருஷ்ணன், உச்சம்பட்டி ஊராட்சி தலைவர் கார்த்திகேயன் உள்பட 15 பேரை கைது செய்தனர்.