பெண்களுடன் இருந்தபோது 'தூங்கிக் கொண்டிருந்தாரா' என்.டி.திவாரி?
எப்படி பல் விளக்குவது என்றாலே பயரியா பல் பொடி நினைவுக்கு வருமோ, அதேபோல, திவாரி என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவரது அஜால் குஜால் லீலைகள்தான். அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆடிய லீலையின் விளைவாக பிறந்த அவரது மகனையே, தனது மகன் இல்லை என்று பல காலமாக கண்ணாமூச்சி ஆடி வந்தார் திவாரி. சமீபத்தில்தான் டிஎன்ஏ டெஸ்ட் மூலம் திவாரியின் குட்டு அம்பலமானது.
அதேபோல ஆந்திர மாநில ஆளுநராக இருந்தபோது பெண்களுடன் உல்லாசமாக இருந்து சிக்கி பதவியை ராஜினாமா செய்து விட்டு ஊரைப் பார்ககப் போனார் திவாரி.
இந்த நிலையில் திவாரிக்கு பல ஆண்டு காலமாகவே தூக்க மாத்திரை கொடுக்கப்பட்டு வந்ததாகவும், இது அவருக்கே தெரியாது என்றும், இது மிகப் பெரிய சதி என்றும் அவரது பாதுகாப்பு உதவியாளர் கூறியுள்ளார்.
இதுகுறித்து திவாரியின் பாதுகாப்பு உதவியாளரான பவானிதத் பட் டேராடூனில் கூறுகையில், உத்தரகாண்ட் முதல்வராக திவாரி பதவியேற்றது முதலே அவருக்கு தூக்க மாத்திரை கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இது திவாரிக்கே தெரியாது.
பெரும் சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகும் இது. இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஒரு நாளைக்கு நான்கு முறை பிற மருந்துகளுடன் சேர்த்து அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து வந்துள்ளனர்.
இதில் அவருடைய நெருக்கமான உதவியாளர்களுக்கும் தொடர்பு உள்ளது. அவரை மயக்கத்திலேயே வைத்திருந்த பல முக்கிய ஆவணங்களில் கையெழுத்தும் பெறப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில ஆளுநராக இருந்தபோதும் அவருக்கு தூக்க மாத்திரை கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் மீது செக்ஸ் புகார் சுமத்தி பதவியை விட்டு விலக வைத்துள்ளனர்.
எட்டு மாதங்களுக்கு முன்பு திவாரியின் உடல் நிலை மோசமானது. இதையடுத்து அவரது உறவினர் மனீஷ் திவாரி, என்டி திவாரியைக் கவனிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் அவருக்கு நீண்ட காலமாக தூக்க மாத்திரை கொடுக்கப்பட்ட விவரம் தெரிய வந்தது என்றார்.
ஆனால் இந்த தூக்க மாத்திரை விவகாரம் ஒரு அரசியல் ஸட்ண்ட் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. தன்னைச் சுற்றி நிற்கும் சர்ச்சைகளிலிருந்து தப்பிக்க நாடமாடுகிறார் திவாரி என்றும் அது கூறியுள்ளது.
இந்தப் புதிய சர்ச்சையால் ஆந்திர மாநில ஆளுநராக திவாரி இருந்தபோது பெண்களுடன் அவர் உல்லாசமாக இருந்த சமயத்தில் தூங்கிக் கொண்டிருந்தாரா அல்லது நல்ல சுய நினைவுடன்தான் இருந்தாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த புதிய கதை குறித்து 88 வயதான திவாரி கருத்து கூற மறுத்து விட்டார்.