தமிழகத்துக்கு நீர் விடுவதை நிறுத்த பிரதமரிடம் கர்நாடக மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் முறையீடு!
உச்சநீதிமன்ற உத்தரவுப்படியும், பிரதமர் மன்மோகன்சிங்கின் உத்தரவுப்படியும் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டிருக்கிறது. இதற்கு விவசாயிகள் முதல் முதல்வர் வரை அங்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் பிரதமரின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள், மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, ரயில்வே இணை அமைச்சர் கே.எச். முனியப்பா, உள்ளிட்டோர் பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது நீர் வள துறை அமைச்சர பவன் குமார் பன்சாலும் உடன் இருந்தார்.
இந்த சந்திப்பு குறித்து பேசிய மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடகத்தில் 49 தாலுகாக்கள் வறட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இனியும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால் கர்நாடக மாநிலம் வறட்சியின் பிடியில் சிக்கித்தவிக்கும். குடி தண்ணீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் பிரச்சினை ஏற்படும் என்பதால் பிரதமர் தனது உத்தரவை மறுபரிசீலனை என்று கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.
பிரதமரை சந்தித்த கர்நாடக பாஜக எம்.பிக்கள் குழு:
இந் நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாஜக லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்களான வெங்கையா நாயுடு, பிரஹலாத் ஜோஷி, பசவராஜ் பட்டீல் உள்ளிட்ட 16 பேர் குழு இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது அலுவலகத்தில் சந்தித்தது.
அப்போது கர்நாடக மாநிலம் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப் பட்டிருப்பதாகவும், அதனால் காவிரி நடுவர் ஆணையம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கான பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த சந்திப்புக்குப் பின் பாஜகவின் பெங்களூர் தெற்கு தொகுதி எம்.பி. ஆனந்த் குமார் நிருபர்களிடம் கூறுகையில், பெங்களூர், மைசூர் மற்றும் பிற நகரங்களின் குடிநீர் தேவைக்காக மட்டும் கர்நாடகத்திற்கு 30 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. காவிரிப் பாசனப் பகுதிகளில் சாகுபடி செய்துள்ள பயிர்களை காப்பாற்றவும், குடிநீர் தேவைக்காகவும் மேலும் 120 டி.எம்.சி. தேவைப்படுகிறது. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை டிசம்பர் வரை நீடிக்கும். மேலும் வறட்சி மற்றும் குறைந்த அளவு மழை பெய்துள்ள கர்நாடகத்தில் இருந்து கடந்த 20 நாட்களில் 21 டிஎம்சி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் போதுமான தண்ணீரை பெற்று விட்டார்கள். எங்களுக்கு தண்ணீர் இல்லை. எனவே நதி நீர் ஆணைய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இன்று முதல் தண்ணீர் திறந்து விடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தினோம் என்றார்.
எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்த ஷெட்டர்:
முன்னதாக கர்நாடக பாஜக முதல்வமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சரான எஸ்.எம். கிருஷ்ணாவை சந்தித்து காவிரி விவகாரம் தொடர்பாக வழங்கிய உத்தரவை பிரதமர் மறுபரிசீலனை செய்ய வலுயுறுத்துமாறு கேட்டு கொண்டார். முதல்வரை சந்தித்த பின்னரே பிரதமரை கிருஷ்ணா சந்தித்தார்.
இப்படி, காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடக மாநில அரசியல்வாதிகளிடம் இருக்கும் ஒற்றுமை தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடமும், எம்.பி.க்கள், அமைச்சர்களிடம் இல்லையே என்று ஆதங்கப்படுகின்றனர் காவிரி டெல்டா விவசாயிகள்.