ரூ. 10 கோடி நகைக் கொள்ளை குற்றவாளியை நெருங்கும் போலீஸ்
மதுரை: மதுரையில் முத்தூட் பின்கார்ப் நிறுவனத்தில் 10 கோடி ரூபாய் நகை கொள்ளை போனது தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டிவருகின்றனர்.
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் முத்தூட் பின்கார்ப் நகை அடகுக்கடையில் சிம்மக்கல் படித்துறையை சேர்ந்த பாலசுப்ரமணியன் மேலாளராகவும், மஞ்சணக்காரத்தெரு சதீஷ்குமார் துணை மேலாளராகவும் மற்றும் 3 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
கடந்த 4ம் தேதி மாலை பணி முடித்து வீட்டிக்கு சென்ற 2 மேலாளர்களை, ஒரு கும்பல் கடத்திச் சென்று சாவிகளை பறித்து 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 37 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட கரிமேடு குற்றப்பிரிவு போலீசார், கொள்ளைக் கும்பல் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி வேனை மீட்டனர்.
இந்த கொள்ளை சம்பவத்திற்கு பைபாஸ் ரோடு பொன்மேனியைச் சேர்ந்த யாமினி பெண் துணைபுரிந்தது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் அவரை தேடிச் சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. தலைமறைவான அந்தப்பெண்ணை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த கொள்ளை பின்னணியில் ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதியானது. இதனையடுத்து 2 தனிப்படையினர், மேலாளர்கள் இருவரிடமும், காவலாளியிடமும் 2வது முறையாக ஞாயிறன்றும் விசாரணை நடத்தினர். கடத்தலுக்கு பயன்படுத்திய டி.என் .67,8350 என்ற எண் உள்ள ஆம்னி கார் 4 பேரிடம் கைமாறியுள்ளது. 4வது நபரை போலீசார் தேடி வருகின்றனர்.