திருவண்ணாமலை கிரிவலம்: பக்தியுடன் சுற்றி வர 200 ஒலி பெருக்கி மூலம் பக்தி பாடல் ஒளிபரப்ப திட்டம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். மொத்தம் 14 கி.மீ. கொண்ட கிரிவலப்பாதையை பக்தர்கள் கால்நடையாக செல்கின்றனர். அப்போது ஓம் நமச்சிவாய மந்திரங்கள் உச்சரித்து கொண்டும், சிலர் பக்தி பாடல்களை பாடி கொண்டும் கிரிவலத்தில் சுற்றி வருகின்றனர்.
ஆனால் கூட்டமாக செல்லும் போது, பக்தர்களின் இறை சிந்தனை மாறுவதற்கு வாய்ப்பு உருவாகிறது. இதை தவிர்க்கும் வகையில் ரூ.25 லட்சம் செலவில் 11 கி.மீ. கிரிவலப்பாதையில் 200 ஒலி பெருக்கிகள் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஒலி பெருக்கியும் 10 மீட்டர் உயரத்திலான கம்பத்தில் சாலையின் இருபுறமுமாக அமைக்கப்பட்டுள்ளது. ஒலி பெருக்கிகளுக்கான மின் இணைப்பு அளிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இது குறித்து கோவில் நிர்வாகி அதிகாரி ஏ.டி.பரஞ்ஜோதி கூறியதாவது,
கிரிவலப் பாதையில் 10 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்புகளில் ஒலி பெருக்கிகளுக்கான மின் இணைப்பு கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் ஒலி பெருக்கிகள் அமைக்கும் பணி நடைபெறும். கோவில் திருப்பணிக்கான நிதி இத்திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. ஒலி பெருக்கிகள் மூலம் கிரிவலப்பாதையில் பக்தி பாடல்கள், மந்திரங்கள் ஆகியவை ஒலித்து கொண்டே இருக்கும்.
கிரிவலப்பாதையில் செல்லும் போது இறை சிந்தனை மட்டுமே வர வேண்டும் என்ற நோக்கத்தோடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பவுர்ணமி நாளில் நாள் முழுவதும் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்படும். மேலும் கிரிவலப்பாதையில் ஒளிரும் டிஜிட்டல் போர்டுகளில் தேவாரம், திருவாசக போற்றி பாடல்கள் வைக்கப்பட உள்ளது. இப்பணிகள் கார்த்திகை தீபத்திற்கு முன்பாக முடிக்கப்படும் என்றார்.