குற்றாலம் அருவி பூங்காவுக்கு வனத்துறையினர் திடீர் பூட்டு-திறப்பு விழா நடைபெறுவதில் சிக்கல்
குற்றாலத்தில் சீசன் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் தவிர பிற மாதங்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருவதில்லை. எனவே ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்காக ஐந்தருவியில் உள்ள தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பழந்தோட்ட பண்ணையை ரூ.6 கோடி செலவில் அருவி பூங்காவாக மாற்றும் பணி தொடங்கியது.
வண்ணத்துபூச்சி பூங்கா, நடைபாதை, நடனமாடும் நீருற்று, உணவகம், புல்வெளி, சிறுவர் விளையாட்டு பூங்கா, பேரணி பூங்கா, பார்வையாளர் மடம், தாழ்தள பூங்கா, மரப்பாலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இதனால் வரும் 11ம் தேதி சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பிரான்ஸ்சிங் முறையில் திறந்து வைக்க திட்டமிட்டுள்ள நிலையில் வனத்துறையினர் இடையூறு செய்ய துவங்கி உள்ளனர்.
அருவி பூங்காவுக்கு செல்லும் முகப்பில் ஒரு கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேட்டை தோட்டக்கலை துறை, வனத்துறை, பொதுப்பணித்துறை ஆகிய 3 துறைகளும் பூட்டி சாவியை வைத்து கொள்ளலாம். ஆனால் தற்போது அருவி பூங்கா பூட்டை மாற்றிவிட்டு புதிய பூட்டை வனத்துறையினர் போட்டுள்ளனர். பூங்காவை பார்வையிட அதிகாரிகள் வரும் போது வனத்துறையினர் வந்து திறந்தால் தான் பார்வையிட முடியும்.
ஏற்கனவே வனத்துறையினர் பழந்தோட்ட அருவியில் குறுக்கிட்டு வசூல்வேட்டை நடத்தியதால் அருவியை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பழந்தோட்ட அருவியில் துவங்கி சிற்றருவியில் கேட் வைத்து பூட்டிவிட்டனர். பழைய குறறாலத்திலும் ஊராட்சிக்கு சொந்தமான நிலத்திற்கு செல்ல வழி மறுத்து வருகின்றனர்.
இது குறித்து குற்றாலம் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது,
சாவி வனத்துறையிடம் மட்டும் தான் இருந்தது. ஆனால் பூங்காவில் வேலை நடந்து வந்ததால் பிற துறையினருக்கு சாவி கொடுத்து இருந்தோம். தற்போது பணி முடிந்துவிட்டதால் பூட்டை மாற்றி விட்டோம். சுற்றுலா பயணிகளை பூங்காவில் அனுமதித்தால் அருகில் உள்ள வனப்பகுதியில் உள்ள தாவரங்களுக்கு பாதிப்பு ஏற்படும். மாவட்ட வன அலுவலரிடம் முறையான அனுமதி பெற்றால் மட்டுமே சாவியை வழங்க முடியும் என்றார்.