பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் ஆளுநர் ரோசைய்யா குடும்பத்துடன் தரிசனம்!
காரைக்குடி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் தமிழக ஆளுநர் ரோசைய்யா குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் உள்ள பிரபல விநாயகர் கோயில்களில் முதன்மையானது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் எனலாம். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பல வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை தமிழக ஆளுநர் ரோசைய்யா தனது குடும்பத்தாருடன், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். நேற்று மாலை 6 மணிக்கு வந்த ரோசைய்யா குடும்பத்தினர், சுமார் அரை மணிநேரம் கோவிலை வலம் வந்தனர். ஆளுநர் ரோசையாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் புரண கும்ப மரியாதையும், முதல் மரியாதையும் வழங்கப்பட்டது.
மேலும் கோவிலில் ஆளுநரின் குடும்பத்தினருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. ஆளுநரின் வருகையை முன்னிட்டு, காரைக்குடி மற்றும் பிள்ளையார்பட்டி, திருப்பத்தூர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.