பிரான்ஸ்- அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு
பிரான்ஸைச் சேர்ந்த செர்கே ஹரோச், அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் வைன்லேண்ட் ஆகியோர் மேற்கொண்டுள்ள ஒளி மற்றும் மேட்டர் தொடர்பான 'குவாண்டம் ஆப்டிக்ஸ்' ஆராய்ச்சிக்காக இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அணுக்களின் துணைத் துகளான போட்டான் மற்றும் அயனிகளின் (ions) செயல்பாடுகளை விரிவாக அறிந்து கொள்ள இவர்களது ஆராய்ச்சி உதவியுள்ளது.
இவர்களது ஆராய்ச்சி ஒளியால் இயங்கும் கடிகாரங்களின் திறனை அணு கடிகாரங்களை விடத் துல்லியமானதாக தரம் உயர்த்தவும், கம்ப்யூட்டர்களின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவும்.
இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு ஹிக்ஸ் போஸானை (கடவுளின் அணுத்துகள்) கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கமாக நோபல் பரிசுகள் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு சில ஆண்டுகள் கழித்தே வழங்கப்பட்டு வருவதால், ஹிக்ஸ் போஸானுக்கான விருது அடுத்த சில ஆண்டுகளில் தரப்படும் என்று தெரிகிறது.
இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு எக்ஸ்ரேவை கண்டுபிடித்த ஜெர்மனியைச் சேர்ந்த வில்ஹெம் ரோண்ட்ஜெனுக்கு வழங்கப்பட்டது நினைவுகூறத்தக்கது.
நாளை வேதியியலுக்கான நோபல் பரிசும், இலக்கியத்துக்கான நோபல் பரிசு வியாழக்கிழமையும், அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும் அறிவிக்கப்படவுள்ளன.
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 15ம் தேதி அறிவிக்கப்படுகிறது. அனைத்து பரிசுகளும் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10ம் தேதி சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படும்.