பெரும் 'குடிமகள்'...ஒரே ராத்திரியில் 5 லிட்டர் மதுவை 'உள்ளே' தள்ளிய டீன் ஏஜ் பெண்!
நம்ம ஊரில் நடக்கவில்லை இது, வழக்கம் போல வெளிநாட்டில்தான், அதாவது இங்கிலாந்தில்தான். இத்தனைக்கும் அந்தப் பெண் வேலை தேடி வரும் ஒரு இளம் பெண். வேலையில்லாதவர்களுக்காக அரசு தரும் நிதியுதவியில் வாழ்க்கையைத் தள்ளி வருபவர். அப்படி கிடைத்த பணத்தில்தான் இந்தக் குடியாட்டத்தைப் போட்டுத் தள்ளியுள்ளார் இந்தப் பெண்.
சரி மேட்டருக்குள் போவோம்...
அப்பெண்ணின் பெயர் சாரா ஜேன் பகுலி (பேரைப் பாரு). வயது 19 ஆகிறது. வேலை தேடி வருகிறார். வேலை கிடைக்கும் வரை இங்கிலாந்து அரசு தரும் உதவித் தொகையை பயன்படுத்தி வாழ்க்கையை ஓட்டி வருகிறார். வேலை இல்லாவிட்டாலும் குடிக்காவிட்டால் மண்டை காய்ந்து போய் விடுமாம் பகுலிக்கு. வாராவாரம் இவருக்கு ஆரவாரமாகத்தான் இருக்க வேண்டும். குடிக்கப் பணம் இல்லாவிட்டால் எதையாவது செய்து காசைத் தேற்றி கடைக்குப் போய் விடுவாராம் - மது அருந்த.
சமீபத்தில் அரசின் வேலையில்லாதோருக்கான நிதியுதவி கைக்கு வந்த நாளில் அதை சிறப்பாக கொண்டாடி விட்டார் பகுலி. அதாவது அன்று இரவு முழுவதும் குடி, குடி, குடியாக கழித்துள்ளார். ஒரே நாள் இரவில் 5 லிட்டர் அளவுக்கு மது குடித்து செம ஆட்டம் போட்டுள்ளாராம்.
மொடாக்குடிகாரியாக திகழும் பகுலி தனது குடிப்பழக்கம் குறித்து குளோசர் என்ற பத்திரிககைக்கு அளித்த பேட்டியில், வார இறுதி நாட்களில் நான் சராசரியாக 9 லிட்டருக்கும் மேலாக குடிப்பது வழக்கம், சகஜம் என்று கூறுகிறார்.
இவருக்கு வாரந்தோறும் அரசு 57 பவுண்டு நிதியுதவியை வழங்கி வருகிறது. அதில் பாதியைக் குடிக்கத்தான் பயன்படுத்துகிறாராம் இந்தக் குடிகார பாவை.
பலமுறை இவர் குடிக்கப் போன இடத்தில் வாந்தி எடுப்பது, சத்தம் போட்டு சிரித்து அட்டகாசம் செய்வது, குண்டக்க மண்டக்க டான்ஸ் ஆடுவது என்று களேபரம் செய்து வெளியேற்றப்பட்டிருக்கிறாராம்.
இவர் அதிகபட்சம் ஒரே நாள் இரவில் 5.5 லிட்டர் வரை குடித்துத் தள்ளியுள்ளாராம். இந்த வித்தியாசப் பெண் குறித்து குளோசர் பத்திரிக்கை சிறப்பு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏன் இப்படி ஒரு குடிப்பழக்கம் என்று சாராவிடம் கேட்டால், வேலை தேடுவது ரொம்பக் கஷ்டம் பாஸ். சோர்ந்து போய் விடுவேன். எனவேதான் குடிப்பழக்கத்தை தொட்டேன். இது எனக்கு ஆறுதல் தருகிறது, சோர்வை நீக்குகிறது. ஜாலியாகவும் இருக்கிறது. ஆனால் ஒரு விஷயம் பிரதர், நான் இதுவரை எங்குமே கலாட்டா செய்ததில்லை. பெரிய பிரச்சினை எதுவும் நடந்ததில்லை என்கிறார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், நான் என்ன டெய்லியா குடிக்கிறேன். வார இறுதி நாட்களில் மட்டும்தான் குடிப்பேன். எல்லோருமே அதைத்தானே செய்கிறார்கள். ராத்திரி குடிக்கப் போனால் காலையில்தான் விழித்தெழுந்து வீட்டுக்கு வருவேன். ரொம்ப ஜாலியாக இருக்கும் காலையில் முழிக்கும்போது.
குடிக்கத்தான் நான் வாழ்ந்து வருகிறேன் என்று கூடச் சொல்லலாம். குடிக்கப் போய் விட்டால் ஜஸ்ட் இரண்டு பெக், மூன்று பெக் என்று போகக் கூடாது. புல்லா குடிச்சுடனும். அதுதான் எனக்குப் பிடிக்கும் என்கிறார் சாரா.
ரொம்ப வித்தியாசமாவுல்ல இருக்கு இந்தப் புள்ளையப் பார்த்தா...!