பிரபல பிடிஎம் கிரிக்கெட் பேட் தயாரிப்பு நிறுவன இயக்குனர் சுதிர் மஹாஜன் கடத்தல்
மீரட்: பிரபல கிரிக்கெட் பேட் தயாரிப்பு நிறுவனமான பிடிஎம்மின் இயக்குனர் சுதிர் மஹாஜன் நேற்றிரவு வீடு திரும்பும் வழியில் மர்மநபர்களால் கடத்தப்பட்டார்.
பிரபல கிரிக்கெட் பேட் தயாரிப்பு நிறுவனம் பிடிஎம். இந்நிறுவனத்தின் இயக்குனர் சுதிர் மஹாஜன்(55). நேற்றிரவு இவர் டெல்லியில் உள்ள தனது தொழிற்சாலையில் இருந்து காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். காரை டிரைவர் ரவிந்தர் என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் கங்காநகர் காவல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது காரை, ஆயுதங்களுடன் நின்ற சில மர்மநபர்கள் மறித்தனர். அதன்பிறகு அதே காரில் ஏறி கொண்ட அவர்கள், காரில் இருந்த டிரைவர் மற்றும் மஹாஜனை கடத்தி சென்றனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு மஹாஜனின் செல்போனில் இருந்து அவரது வீட்டிற்கு ஒரு அழைப்பு வந்தது. இதில் பேசிய மர்மநபர், கடத்தப்பட்ட மஹாஜனை விடுவிக்க ரூ.2 கோடி கேட்டு மிரட்டினார்.
இது குறித்து எஸ்.பி.பாண்டே கூறியதாவது,
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கடத்தப்பட்ட மஹாஜனின் காரை, மாவானா என்ற இடத்தில் அநாதையாக விடப்பட்ட நிலையில் கண்டுபிடித்தோம். அந்த காரில் கடத்தல் சம்பவம் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளது. விரைவில் கடத்தல் கும்பலை பிடிப்போம் என்றார்.