தூத்துக்குடியில் இருந்து ஆஸி. செல்ல முயன்ற 55 இலங்கை அகதிகள் பிடிபட்டனர்
கோவில்பட்டி : தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஆஸ்திரேலியாவிற்கு தப்ப முயற்சித்த 55 இலங்கை அகதிகளை எட்டையபுரம் போலீசார் மீட்டனர்.
கோவில்பட்டியை அடுத்த எட்டையபுரம் அருகே சிந்தலக்கரை வெட்காளிஅம்மன் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். கடந்த 7-ந் தேதி இந்த கோவிலுக்கு 2 வேன்களில் 55 பேர் வந்திருந்தனர். கோவிலில் சாமி தரிசனம்செய்த அவர்கள் அங்கேயே தங்கினர். அவர்கள் இலங்கை தமிழில் பேசியதால் சந்தேகமடைந்த கோவில் நிர்வாகத்தினர் இதுபற்றி எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் அனைவரும் இலங்கை அகதிகள் என்றும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அகதி முகாம்களில் இருந்து தப்பி வந்தவர்கள் என்றும் தெரியவந்தது. 55 பேரும் தூத்துக்குடி வழியாக கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியா தப்பி செல்ல இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அகதிகள் அனைவரும் திருச்சி அம்மையப்பா நகரை சேர்ந்த ரமணன் என்பவரிடம் ரூ.1 1/2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை ஆஸ்திரேலியா செல்வதற்காக பணம் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட அம்மையப்பன் இவர்கள் அனைவரையும் ஆஸ்திரேலியா அழைத்து செல்வதாக கூறி மோசடி செய்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது..
இதைத் தொடர்ந்து 55 அகதிகளையும் மீட் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஏஜெண்டாக செயல்பட்ட ரமணனும் இலங்கை அகதி என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க தனிப்படை போலீசார் திருச்சி விரைந்துள்ளனர். ரமணனை போலீசார் கைது செய்யும் பட்சத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.