பராமரிப்பு இல்லாத கங்கைகொண்டான் பூங்காவில் அழிந்து வரும் மான்கள்!
நெல்லையை அடுத்துள்ள கங்கைகொண்டான் வனப்பகுதியாக இருந்த போது அங்கு அதிகளவில் மான்கள் உலா வந்தன. மக்கள் குடியேற்றம், தொழில் பெருக்கம் ஆகிய காரணங்களால் வனப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்தது. தற்போது மீதமுள்ள மான்களை காப்பாற்ற அங்கு மான் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மான் பூங்காவை மேம்படுத்த போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் குடிக்க தண்ணீர் மற்றும் உணவு தேடி மான்கள் பூங்காவில் இருந்து வெளியேறுகின்றன. அப்போது பூங்காவின் பின்புறத்தில் உள்ள தோட்ட கிணறுகளில் விழுந்தோ, வேட்டைக்காரர்களிடம் சிக்கியோ இறக்கின்றன.
மேலும் பூங்காவின் முன்புறம் உள்ள நெடுஞ்சாலையை மான்கள் கடக்கும் போது, வாகனங்கள் மோதியும், நாய்கள் கடித்தும் பல மான்கள் சாகின்றன. பாராமரிப்பின்றி பூங்காவின் சுற்றுசுவர் இடிந்து கிடப்பதால், மான்கள் எளிதாக வெளியேறி, எதிர்புறம் உள்ள ராமையன்பட்டி, அபிஷேகப்பட்டிக்கு செல்கின்றன.
அபிஷேகப்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் மான்களுக்கு உணவும், தீனியும் கிடைக்கிறது. இதனால் அப்பகுதிக்கு மான்கள் அதிகளவில் செல்கின்றன. இவ்வாறு செல்லும் மான்கள் நாய்களிடம் சிக்கி கொள்கின்றன.
இது குறித்து வனத்துறையினரிடம் கேட்டால், கங்கைகொண்டான் மான் பூங்கா சராணாலயம் அல்ல. எனவே அதை தொடர்ந்து பராமரிக்க முடியாது. மேலும் மான்கள் ஒரிடத்தில் நிற்காமல் அங்கும், இங்குமாக ஓடும் விலங்கு. விரைவில் பெருகிவிடும். எனவே அவற்றை கட்டுபடுத்துவதும் முடியாத செயல் என்று கூறுகின்றனர்.
மான்களை பாதுகாக்கும் வகையில், பூங்காவில் மான்கள் இறப்பதை தடுக்க வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட மக்கள் விரும்புகின்றனர்.