போலி ஆயுத பேர ஊழல்: பாஜக 'மாஜி' பங்காரு லட்சுமணுக்கு ஜாமீன்
டெல்லி: போலி ஆயுத பேர ஊழல் வழக்கில் சிறையில் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
2001-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியின்போது பாரதீய ஜனதா தலைவராக இருந்த பங்காரு லட்சுமணனிடம் தெகல்கா இணைய தளம் போலியாக ஆயுத பேரம் நடத்தியது. தனது நிருபர்களை இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனத்தினர் என்று கூறி பங்காரு லட்சுமணை சந்திக்க வைத்தது. ராணுவத்துக்கு பைனாகுலர் வாங்க தங்கள் நிறுவனத்தை மத்திய அரசுக்கு சிபாரிசு செய்ய கோரி ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்தனர்.
அவர் பணத்தை பெற்றுக் கொண்ட போது ரகசிய கேமராவால் படம் பிடித்து இணைய தளத்தில் வெளியிட்டு அம்பலப்படுத்தி விட்டனர். சிடிக்களையும் தெகல்கா வெளியிட்டது. இதனையடுத்து பங்காரு லட்சுமண் ராஜினாமா செய்தார். இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
பங்காரு லட்சுமண் மீது 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீண்டநாட்களாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் பங்காரு லட்சுமணுக்கு 4 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் பங்காரு லட்சுமணன் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி கடந்த செப்டம்பர் மாதம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனையடுத்து டெல்லி நீதிமன்றம் இன்று ரூ.50 ஆயிரம் சொந்தப் பிணையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
பங்காரு லட்சுமணனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து அவர் திகார் சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.