ஏற்காட்டில் 'தம்பி பிரபாகரன்' உணவகம்- பிரபாகரன் மீது அன்பு குறையாத தமிழர்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். கடந்த 1972ல் புதிய தமிழ் புலிகள் என்ற அமைப்பை தனது 18வது வயதில் பிரபாகரன் தொடங்கினார். 1975ல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் அவர் அதிகமாக இயங்கி வந்த கால கட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக அவர் குற்றச்சாட்டப்பட்டார்.
கடந்த 1976 மே 5ம் தேதி புதிய தமிழ் புலிகள் இயக்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது. உலகில் உள்ள பல்வேறு நாட்டில் வாழும் தமிழர்கள் வேலுப்பிள்ளை பிரபாகரனை தமிழீழத் தேசியத் தலைவராக மதித்து போற்றுகிறார்கள்.
குறிப்பாக தமிழகத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரனை தமிழர்களின் கடவுளாகவே மதிப்பவர்கள் உண்டு. இதனை பறைசாற்றும் வகையில் அவரது பெயரையும், படத்தையும் உடம்பில் பச்சை குத்திக் கொள்வதும், தங்களது குழந்தைகளுக்கு பிரபாகரன் பெயரை வைத்தும் தமிழர்கள் மகிழ்கின்றனர். சிலர் தங்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு பிரபாகரன் பெயரையை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் ஏற்காட்டில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு பிரபாகரனின் பெயர் வைக்கப்பட்டுள்ளது, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏற்காட்டை அடுத்த ஒண்டிக்கடையில், தம்பி பிரபாகரன் உணவகம் என்ற பெயரில் ஒரு உணவகம் செயல்படுகிறது.
இந்த உணவகத்தில் பல இடங்களில் பிரபாகரனின் வீரமிக்க படங்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பிரபாகரனின் கூறிய தத்துவங்கள் வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களை வரவேற்கும் தமிழ் இளைஞர்கள், இந்த செயலுக்கு காரணமானவர்களை பாராட்டி வருகின்றனர்.