ராஜ கண்ணப்பன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை தொடங்கியது
சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சாட்சிகள் விசாரணை தொடங்கியுள்ளது.
முதலாவது ஜெயலலிதா ஆட்சியின்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். அப்போது இவரது பெயர் எஸ். கண்ணப்பன். பின்னர் ''வாஸ்துப்படி'' தனது பெயரை ராஜ கண்ணப்பன் என்று மாற்றிக் கொண்டார். தனிக் கட்சி ஆரம்பித்து நடத்தினார். அது சரிப்பட்டு வராமல் மீண்டும் அதிமுகவுக்கே திரும்பினார். கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
ராஜ கண்ணப்பன் 1991 முதல் 96 வரை பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.11 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 252 மதிப்புள்ள கட்டிடங்கள், நிலங்கள், வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான சொத்துக்களை தன் பெயரிலும் தன் மனைவி, தாயார் மற்றும் உறவினர் பெயரிலும் வாங்கியதாக 1996-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கண்ணப்பனின் மனைவி நளாயினி, தாயார் ராஜலட்சுமி, தம்பி செந்தாமரை, மற்றொரு தம்பி திருவழகு, உறவினர்கள் செல்லம்மாள், கண்ணகி, கலைராஜன், கண்ணாத்தாள், தவமணி, ஜெயபாரதி, தேவகியம்மாள், பாலசுப்பிரமணியன், கணபதி, சுலோச்சனா, கலைமதி, லட்சுமணன், மாணிக்கம், பெருமாள், சரஸ்வதி ஆகிய 20 பேர் சேர்க்கப்பட்டனர்.
சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இது நீண்ட காலமாக விசாரணையில் இருந்து வருகிறது. குற்றப்பத்திரிக்கை 2005-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டது. 20 பேருக்கும் 2007ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
விசாரணைக் காலத்திலேயே கண்ணப்பனின் மனைவி நளாயினி, தாயார் ராஜலட்சுமி ஆகியோர் இறந்து போய் விட்டனர். இதனால் இவர்களது பெயர்கள் குற்றப்பத்திரிக்கையிலிருந்து நீக்கப்பட்டது. மற்ற 18 பேர் மீது
விசாரணை நடந்து வருகிறது.
இவர்கள் மீதான குற்றச்சாட்டு கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி பதிவு செய்யப்பட்டது. பின்னர் நீதிபதி செல்வக்குமார் முன்பு நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கண்ணப்பன் உள்பட 14 பேர் ஆஜராகவில்லை. மற்றவர்கள வந்திருந்தனர்.
நேற்று முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. முதலில் சிவகங்கை விஏஓ வேலுச்சாமி நேரில் ஆஐராகி அரசுத் தரப்பில் சாட்சியம் அளித்தார். அதப்படக்கி கிராமத்தில் உள்ள கண்ணப்பனின் பூர்வீகச் சொத்துக்கள் குறித்து அவர் சாட்சியம் அளித்தார். பின்னர் விசாரணை அக்டோபர் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.