தமிழகத்தில் மழை: மின்னல் தாக்கி தாய்- மகன் பலி, 4 பேர் படுகாயம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மின்னல் தாக்கிய தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அதேபோல நீலகிரி ஏற்பட்ட மின்னல் தாக்கி தாயும், மகனும் படுகாயமடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் தூசி அடுத்த மடிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி அருள்மொழி(43). இவர்களுக்கு வெங்கடேசன்(20), கோகுலகிருஷ்ணன்(18) என்ற 2 மகன்கள் உள்ளனர். அனைவரும் விவசாய கூலித்தொழிலாளர்கள்.
இந்த நிலையில் நேற்று அருள்மொழி, வெங்கடேசன், கோகுலகிருஷ்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வெங்கடேசனின் மகன் வாசுதேவன்(28) ஆகியோர் அப்பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் வேர்க்கடலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது லேசான மழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல் 4 பேரும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் 4 பேர் மீதும் திடீரென மின்னல் தாக்கியது. இதில் அருள்மொழியும், அவரது மகன் கோகுலகிருஷ்ணனும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
வெங்கடேசன், வாசுதேவன் ஆகியோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களின் சத்தம் கேட்டு அருகில் இருந்தோர், அவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.கண்ணப்பன் உத்தரவின் பேரில், தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். மேலும் இச்சம்பவத்தில் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நீலகிரியில் 2 பேர் காயம்:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு, மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது.
கோத்தகிரி கேர்பெட்டா எஸ்டேட் பகுதியில் நேற்று மின்னல் தாக்கியது. இதில் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி லட்சுமி(30), அவரது மகன் முருகவேலன்(8) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரும் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகின்றனர்.