தமிழக பள்ளி மாணவர்கள் 1.35 கோடி பேருக்கு ஸ்மார்ட் கார்ட்'
சென்னை: தமிழக பள்ளி மாணவர்கள் 1.35 கோடி பேருக்கு ஸ்மார்ட் கார்டுகளை விரைவில் அரசு வழங்க இருக்கிறது.
தமிழகத்தில் 35 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதேபோல் உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆகியவை மொத்தம் 23 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. மொத்தம் 1 கோடியே 35 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். இவர்களைப் பற்றிய அனைத்து விவரங்களுடனான ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான ஏற்பாட்டை பள்ளிக் கல்வி இயக்குநர் மேற்கொண்டு வருகிறார்.
இந்த கார்டு பள்ளிக்கல்வியின் கல்வி சார்மேலாண்மை தகவல் முறைமை இணையதளத்தோடு நிறுவனத்துடன் இணைக்கப்படும். கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி வழங்கப்பட வேண்டிய இவை கார்டு தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வழங்கப்படவில்லை.
இந்த கார்டு ஒரு அடையாள அட்டையாகவும் பயன்படுத்த முடியும். மாணவர் ஏதோ ஒரு விபத்தில் சிக்கினால் உடனடியாக அவருக்கு ரத்தம் தேவைப்பட்டால் அப்போது ரத்தப்பிரிவை பார்க்க தேவையில்லை. அவரது ஸ்மார்ட் கார்டில் உள்ள ரத்தக்குரூப்பை பார்த்து ரத்தம் ஏற்றலாம். இதனால் அவர் உயிர் பிழைக்கவும் வாய்ப்பு உள்ளது. இதேபோல் வேறு ஒரு பள்ளியில் சேர்த்துக் கொள்ளும்போது அவரைப் பற்றிய தகவல்களை இந்த கார்டு மூலம் தெரிந்து கொள்ளலாம்.