பச்சோரி குழு அறிக்கையின்படி சேது சமுத்திர திட்டம் தேவையில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு
டெல்லி: சேது சமுத்திரத் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்துவது பொருளாதார, சூழலியல் சாத்தியமற்றது என்று பச்சோரி குழு தாக்கல் செய்த அறிக்கையை ஏற்று சேது சமுத்திர திட்டமே தேவையில்லை என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது.
பச்சோரி குழு அறிக்கை
சேது சமுத்திரத் திட்டத்தை மாற்று வழிப் பாதையில் செயல்படுத்துவது குறித்த சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய ஆர்.கே. பச்சௌரி தலைமையில் மத்திய அரசு குழு அமைத்தது. அக்குழு ராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படாமல் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை மாற்று வழித்தடத்தில் செயல்படுத்துவது பொருளாதார, சுற்றுச்சூழல் ரீதியாக சாத்தியமில்லை என்று அறிக்கை தாக்கல் செய்தது. இக் கருத்தை ஏற்றுக் கொள்வதாக தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் நிலைப்பாட்டை விளக்கும் பதில் மனு மாநில தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி சார்பில் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசின் மனு விவரம்
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
ராமர் பாலத்துக்கு சேதம் விளைவிக்காமல் தனுஷ்கோடி கரையை உடைத்து சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டத்தை "4ஏ' தடத்தில் நிறைவேற்றுவது சாத்தியமற்றது என்று நிபுணர் குழு கூறியள்ளதை தமிழக அரசும் ஏற்றுக் கொள்கிறது.
தனுஷ்கோடியில் 0.8 கி.மீ தூரத்தில் கடல் மணலைத் தோண்டி அகழ்வுப் பணி மேற்கொள்ள கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும். ஆனால், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு மேலாண்மை ஆணையம் இதுவரை இத்திட்டத்தை ஆய்வு செய்யவில்லை.
"4ஏ' மாற்று வழியில் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், தேசிய வன உயிரின வாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியம் என்று தமிழக தலைமைச் செயலர் கடந்த மார்ச் மாதம் மத்திய கப்பல் அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆகையால், மாற்று வழியில் இத்திட்டத்தை செயல்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
தேசிய சின்னமாக ராமர் பாலம்:பாரம்பரியம் மிக்க, புராதனச் சின்னமான ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கடந்த மார்ச் மாதம் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். மாற்றுப்பாதையில் திட்டத்தைச் செயல்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
எனவே, "யுனெஸ்கோ' சர்வதேச அமைப்பின் விதிமுறைகளைப் பூர்த்தி செய்யும் பாரம்பரியம் மிக்க ராமர் பாலத்தை "தேசிய நினைவுச் சின்னம்' என அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு தமது மனுவில் கூறியுள்ளது.
மேலும் சேது சமுத்திர திட்டம் தொடர்பாக சுற்றுச்சூழல் நிபுணர் ஆர்.கே. பச்சௌரி அளித்த அறிக்கை மீதான நிலையைத் தெரிவிக்க மத்திய அரசு வழங்கிய அவகாசத்தை மேலும் ஆறு வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் நீட்டித்தது.