கேரள சிறையில் கோவை வாலிபர் மர்மச் சாவு- சிபிஐயின் குற்றப்பத்திரிக்கையில் குறைகள்
திருவனந்தபுரம்: பாலக்காட்டில் பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட கோவை வாலிபர் கேளராவில் சிறையில் மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை கொச்சி சிபிஐ நீதிமன்றம் திருப்பி அனுப்பிவிட்டது.
பாலக்காட்டை சேர்ந்த ஷூலா என்ற பெண்ணை, கடந்த 29.3.2010 அன்று ஒரு கும்பல் பட்டபகலில் வீடு புகுந்து கழுத்தை அறுத்து கொலை செய்தது. அதன்பிறகு அவரிடம் இருந்த நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியது.
இது தொடர்பாக கோவையை சேர்ந்த சம்பத் உள்பட 4 பேரை பாலக்காடு போலீசார் கைது செய்தனர். இந் நிலையில் சம்பத் பாலக்காடு காவல் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் அப்போதைய திருச்சூர் சரக ஐஜி முகமது யாசின், பாலக்காடு எஸ்.பி.யாக இருந்த விஜய் சாக்கரே உள்பட 11 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது முகமது யாசின் ஏடிஜிபியாகவும், விஜய் சாகரே டிஐஜியாகவும் உள்ளனர்.
இந் நிலையில் சம்பத்தின் உறவினர்கள், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி எர்ணாகுளம் சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிக்கையை பரிசீலனை செய்த நீதிமன்றம், அதில் சில குறைகளை சுட்டிக்காட்டி திரும்ப அனுப்பியது. குறைகளை நிவர்த்தி செய்துவிட்டு மீண்டும் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.