தூத்துக்குடியில் கொடியேற்றத்துடன் துவங்கிய தசரா திருவிழா
தூத்துக்குடி: தூத்துக்குடி குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இதில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கர்நாடகா மாநிலம் மைசூரில் ஆண்டுதோறும் தசரா திருவிழா கோலகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு தசரா திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று காலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு கொடி பட்டம் யானை மீது எடுத்துவரப்பட்டு 9 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. செல்லப்பா பட்டார், ராஜா பட்டர் ஆகியோர் கொடியேற்றினர். இதையடுத்து 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது.
வரும் 16ம் தேதி இரவு 9 மணிக்கு கற்பக விருட்ச வாகனத்தில் விஸ்வகர்கமேஸ்வரர் கோலத்திலும், 17ம் தேதி இரவு ரிஷிப வாகனத்தில் பார்வதி கோலத்திலும், 18ம் தேதி இரவு மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் கோலத்திலும், 19ம் தேதி இரவு காமதேனு வாகனத்தில் நவநீதிகிருஷ்ணர் கோலத்திலும், 20ம் தேதி இரவு சிம்ம வாகனத்தில் மகிஷா சூரவர்த்தினி கோலத்திலும், 21ம் தேதி இரவு பூச்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்திலும், 22ம் தேதி இரவு கமல லக்னத்தில் கஜலெட்சுமி கோலத்திலும், 23ம் தேதி இரவு 9 மணிக்கு அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்திலும் அம்மன் வீதியுலா நடைபெற உள்ளது.
வரும் 24ம் தேதி இரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன் எழுந்தருளி மகிஷாசூரனை சம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். தசரா திருவிழாவை ஓட்டி காலை முதல் மாலை வரை சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு அலங்கார பூஜை நடைபெறும்.