துரை தயாநிதிக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிப்பு!
பல்லாயிரம் கோடி கிரானைட் மோசடி தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் ஊழியர்கள், அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர இந்த முறைகேட்டில் தொடர்புடைய துரை தயாநிதி, பழனிச்சாமியின் மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார், சிந்து கிரானைட் செல்வராஜ், பி.எஸ். கிரானைட் பெரியசாமி உள்ளிட்ட 40 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஒலிம்பஸ் கிரானைட் குவாரி நிறுவனம் மூலமாக சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து, கடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து துரை தயாநிதி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால், அவர் தலைமறைவாக உள்ளார். இந் நிலையில் துரை தயாநிதியை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பிக்கக் கோரி போலீஸார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கிரானைட் முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வரும் 8 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து இன்று உத்தரவிட்டார்.
இதையடுத்து ஒரு வாரத்தில் இவர்கள் அனைவரும் போலீசாரிடமோ அல்லது நீதிமன்றத்திலோ சரணடைவார்கள் என்று தெரிகிறது.
இந் மோசடியில் ஈடுபட்ட பி.எஸ். கிரானைட் நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் உரிமையாளர் பி.எஸ்.பெரியசாமியின் வீடுகளில் எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று போலீசார் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றியதோடு, அலுவலகத்துக்கும் சீல் வைத்தனர்.
அதே போல போலீஸ் படையினர் மேலூரில் உள்ள பி.எஸ். கிரானைட் அலுவலக பணிமனையிலும் சோதனை நடத்தி அங்கு நிறுத்தப்பட்டிருந்த 14 வாகனங்களையும் பறிமுதல் செய்து, அந்த பணிமனைக்கும் சீல் வைத்தனர்.