'பொம்பள' கமாண்டோ எங்களுக்கு வேண்டாம்.. நிராகரிக்கும் ஜெ., மாயா
டெல்லி: தேசிய பாதுகாப்புப் படையான என்எஸ்ஜி முதல் முறையாக பெண் கமாண்டோப் படையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் பெண் கமாண்டோக்கள் எங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை விரும்பவில்லை என்று பெண் அரசியல் தலைவர்களான முதல்வர் ஜெயலலிதாவும், உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதியும் கூறியுள்ளனர்.
25 பெண் 'சிங்கங்கள்'!
என்எஸ்ஜியானது இதுவரை ஆண் கமாண்டோக்களை மட்டுமே கொண்டிருந்தது. தற்போது முதல் முறையாக 25 பெண் வீராங்கனைகளைக் கொண்ட புதிய பிரிவை உருவாக்கியுள்ளது.
'அட்டாக்' முதல் 'அதிரடி' வரை!
இந்த 25 பெண் கமாண்டோக்களும் சகலவிதமான பயிற்சிகளிலும் ஈடுபடுத்தப்பட்டு அதிரடியாக களம் இறக்கப்படவுள்ளனர். எப்படிப்பட்ட தாக்குதல் நடந்தாலும் அதைத் தாக்கி தவிடுபொடியாக்கி விடுவார்களாம் இந்த கமாண்டோக்கள்.
பெண் விஐபிகளுக்காக மட்டும்
பெண் கமாண்டோப் படைப் பிரிவு விஐபிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. குறிப்பாக பெண் விஐபிகளுக்கு பாதுகாப்புத் தருவதே இதன் முக்கிய நோக்கம்.
எங்களுக்கு வேணாம்.. ஜெ., மாயா
ஆனால் இந்தியாவின் அதி முக்கிய பெண் விவிஐபிக்களான, பாதுகாப்பு வளையத்தின் கீழ் வலம் வரும் தலைவர்களான முதல்வர் ஜெயலலிதாவும், மாயாவதியும் இந்த பெண் கமாண்டோக்கள் எங்களுக்குத் தேவையில்லை என்று கூறி விட்டார்களாம்.
ஏன் வேண்டாம் என்கிறார் ஜெ.?
இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் கமாண்டோப் படைப் பிரிவை உருவாக்கியவர் ஜெயலலிதாதான். தமிழக பெண் போலீஸாரைத் தேர்வு செய்து இந்தப் படையை அவர் உருவாக்கினார். ஆனால் அவரே தற்போது என்எஸ்ஜி பெண் கமாண்டோக்களை வேண்டாம் என்று சொல்வது ஏன் என்று தெரியவில்லை.
அகிலேஷுக்கும் இனி 'கருப்புப் பூனை' வருமாம்
பெண் கமாண்டோக்கள் விவகாரம் இப்படி எடுத்த எடுப்பலியே சிக்கலாகியிருப்பது ஒரு பக்கம் இருக்க, உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவையும் என்.எஸ்.ஜியின் இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்புப் பட்டியலில் சேர்த்துள்ளனராம். அவருடைய அப்பா முலாயம் ஏற்கனவே கருப்புப் பூனைகளின் பாதுகாப்பில்தான் உள்ளார் என்பது தெரிந்ததுதானே...