இலங்கையை விட்டு கப்பல் மூலம் தப்பி ஆஸி.க்கு செல்ல முயன்ற 35 சிங்களவர் கைது
கொழும்பு: இலங்கையில் சிங்களவர் ராஜபக்சே ஆளும் ஆட்சியில் வாழ முடியாமல் ஆஸ்திரேலியாவுக்கு கப்பல் மூலம் தப்பிச் செல்லும் தமிழர்கள் எண்ணிக்கைதான் அதிகரித்து வந்தது. அவர்களுடன் ஓரிரு சிங்களவரும் சென்று வந்த நிலைமை மாறி 35 சிங்களவர்கள் தப்பி வெளியேறிய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இலங்கையின் தென்கடற்பரப்பில் இன்று அதிகாலை படகு ஒன்றை கந்தர கடற்பரப்பில் வழிமறித்த இலங்கை படையினர் அதிலிருந்த 35 பேரையும் கைது செய்தனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் இலங்கை கடற்படையினருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. இலங்கை கடற்படையிடம் பிடிபட்ட 35 பேருமே சிங்களவர்தான் என தெரியவந்தது. இதுவரை தமிழர்கள்தான் அதிகளவில் பிடிபட்டு வந்த நிலையில் சிங்களவர்கள் ஒட்டுமொத்தமாக சிக்கியிருப்பது இதுவே முதல் முறை.
அனைவரும் 'இசுறு புதா' என்ற படகு மூலம் பயணிக்க முயற்சித்தனர் என்று இலங்கை கடற்படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அனைவரும் காலி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.