துப்பாக்கி சூடு சம்பவம்: குலசேகரப்பட்டிணம் போலீசார் கூண்டோடு இடமாற்றம்
கூடங்குளம்: மணப்பாட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் மீனவர் பலியானதை தொடர்ந்து, குலசேகரப்பட்டிணம் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் கடந்த மாதம் 10ம் தேதி கடற்கரை வழியாக அணுமின் நிலையத்தை முற்றுகையிட வந்த போது மோதலை ஏற்பட்டது. அப்போது போலீசார் கண்ணீர் புகை குண்டை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இதனால் நெல்லை, தூத்துக்குடி கடலோர கிராமங்களில் பதற்றம் நிலவியது.
கூடங்குளம், வைராவிகிணறு, உவரி, திருச்செந்தூர், மணப்பாடு ஆகிய பகுதிகளில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணப்பாட்டில் போராட்டம் நடத்துவதற்காக மீனவர்கள் ஊர்வலமாக திரண்டு வந்தனர். அப்போது குலசேகரப்பட்டிணம் போலீஸ் சோதனை சாவடி பந்தல் எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் போலீசார் சிலரும் தாக்கப்பட்டனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் மணப்பாட்டை சேர்ந்த மீனவர் அந்தோணி பலியானார்.
துப்பாக்கி சூட்டில் மீனவர் பலியானதை கண்டித்தும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மீனவ கிராமங்களில் போராட்டம் நடந்தது. இதையடுத்து குலசேகரப்பட்டிணம் போலீசார் அனைவரையும் கடந்த மாதம் 20ம் தேதி கூண்டோடு மாற்றி தூத்துக்குடி எஸ்பி (பொறுப்பு) மூர்த்தி உத்தரவிட்டார்.
இன்ஸ்பெக்டர் சிவகுமார் நாசரேத்துக்கும், சப்-இன்ஸ்பெக்டர் பால் ஐசக் முறப்பநாடுக்கும், ஸ்ரீகலா சிபிசிஐடிக்கும் மாற்றப்பட்டனர். ஏட்டுக்கள் சுயம்பு, கண்னையா, மாரியப்பன், ஜோலார் ஆகிய 4 பேரும் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். அங்கிருந்த ஏட்டுகள் சுயம்புலிங்கம், முறப்பநாடு, கண்னையா தூத்துக்குடி சிப்காட், மாரியப்பன் சாயர்புரம், ஜோலார் புதுக்கோட்டை காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.