நக்சல் பயிற்சி பெற்ற நபர்- சேலத்தில் கூடங்குளம் எதிர்ப்பு போஸ்டர் ஒட்டிய போது கைது
சேலம்: நக்சலைட்டுகளிடம் ஆயுத பயிற்சி பெற்ற நபர் ஒருவர், சேலத்தில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போஸ்டர் ஒட்டிய போது, போலீசாரிடம் சிக்கினர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த இடங்கணசாலை என்ற இடத்தில் கடந்த 15ம் தேதி கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக ஒருவர் துண்டு பிரசுரங்களை கொடுத்து போராட்டம் நடத்தினார். மேலும் கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக அவர், அப்பகுதியில் சுவரொட்டிகளையும் ஒட்டி வந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீசார், அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவரது பெயர் பச்சமுத்து(35) என்பதும், இடங்கணசாலையை அடுத்த காடையாம்பட்டியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும் கடந்த 2002ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியில் நக்சலைட்டுகளிடம், பச்சமுத்து ஆயுத பயிற்சி பெற்றவர் என்பதும், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் நடத்தி வந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியது, அரசுக்கு எதிராக செயல்பட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதன்பிறகு பச்சமுத்துவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.
நக்சலைட்டுகளிடம் பயிற்சி பெற்ற பச்சமுத்துவிற்கு, தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்குமா? அவரது இயக்கத்தில் உள்ள நபர்கள் எத்தனை பேர்? இவர்கள் சேலத்தில் தங்கி இருந்த நோக்கம் என்ன? கூடங்குளம் எதிர்பாளர்களுக்கு ஆதரவாக பச்சமுத்து நோட்டீஸ் ஒட்ட காரணம் என்ன? ஆகியவை குறித்து போலீசார் விசாரிக்க உள்ளனர். இதற்காக பச்சமுத்துவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கியூ பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.