'பம்பு செட்' அறையில் மழைக்கு ஒதுங்கிய 4 பேர் கூரை இடிந்து விழுந்து பலி-3 பேர் காயம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள், மழைக்கு ஒதுங்கிய பம்பு செட் அறையின் கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிப்பாடுகளில் சிக்கிய 4 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுக்காவில் மேலசெய்தலை என்ற கிராமத்தை சேர்ந்தவர் சோலையப்ப நாயக்கர். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று கேந்திப்பூ பயிர் நாற்று நடும் பணி நடைபெற்றது. இப்பணியில் சோலையப்பப நாயக்கரின் மனைவி சுப்பம்மாள்(50) உட்பட மொத்தம் 8 பெண்கள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் மழை துவங்குவதற்குள் நாற்று நடும் பணியை முடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மாலை 4 மணியளவில் மழை துவங்கியது. சிறிது நேரத்தில் மழை தீவிரமடைந்ததால், நாற்று நடும் பணி நிறுத்தப்பட்டது.
மழையில் நனையாமல் இருக்க, தோட்டத்து கிணற்றின் அருகே உள்ள பம்பு செட் அறைக்கு 8 பேரும் சென்றனர். அந்த அறை நிலத்தில் 15 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டு, பம்பு செட் வைக்கப்பட்டிருந்தது. அந்த அறைக்கு மேலே காங்கீரிட் கூரை அமைத்து, சிறிய அறை அமைக்கப்பட்டிருந்தது.
அந்த சிறிய அறையில் 7 பேர் மட்டுமே நிற்க முடிந்ததால், சிதம்பரம் என்ற பெண் மட்டும் வெளியே நிற்க மற்ற 7 பேரும் உள்ளே மழைக்கு ஒதுங்கினர். அப்போது எதிர்பாராதவகையில் பாரம் தாங்க முடியாமல் பம்பு செட் அறையின் காங்கிரீட் தளம் இடிந்து விழுந்தது. இதில் அந்த அறையில் இருந்த 7 பேரும் இடிபாடுகளில் சிக்கினர்.
வெளியே நின்ற சிதம்பரம் மட்டும் விபத்தில் இருந்து தப்பினார். இதையடுத்து அவர், கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார். அப்பகுதியினர் வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். அப்போது சோலையப்ப நாயக்கர் மனைவி சுப்பம்மாள், ஆதிலட்சுமி(40), மகாராசியம்மாள்(55), அழகம்மாள்(55) ஆகியோர் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
மேலும் பத்திரகாளி (55), கற்பகம்(38), கருப்பாயி அம்மாள்(52) ஆகிய 3 பெண்கள் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் பத்திரகாளியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது.