'ஐயா... ஆர்க்காட்டாரே.. எங்களை மன்னிச்சிருங்க!'
முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டு மூச்சுத் திணறத் திணற வாங்கி அடியை வெளியில் சொல்ல முடியாமல் வெட்கித் தலை குனியும் நிலையில்தான் இன்று தமிழக மக்கள் தவிக்கிறார்கள்... காரணம் ஒன்றல்ல...!
எல்லாமே ஜாஸ்திதான்
ஒருபக்கம் விண்ணை முட்டும் விலைவாசி... போக்குவரத்துக் கட்டணங்களின் பகீர் உயர்வு... மகா மோசமான சாலைப் பராமரிப்பு, சுகாதாரக் கேடுகளால் பரவும் நோய்கள்.. இதையெல்லாம் யாரிடம் போய் சொல்லி முறையிடுவது என்று கூடத் தெரியாத நிலை.
உங்க வீட்டு மின்வெட்டா, எங்க வீட்டு மின்வெட்டா
இன்னொருபக்கம் இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல, மின்வெட்டு. அதுவும் உங்க வீட்டு மின்வெட்டு எங்க வீட்டு மின்வெட்டு இல்லை... தமிழக வரலாறு காணாத 16 முதல் 18 மணி நேர மின்வெட்டு.
சென்னைக்கு மட்டும் 23 மணி நேரம் கரண்ட்
சென்னையில் 23 மணிநேர மின்சார வசதியைப் பெறும் (இன்றுமுதல் 22 மணிநேரம்) சொகுசுப் பேர்வழிகளுக்கு இந்தக் கஷ்டம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், சென்னையிலிருந்து 26 கிமீ தள்ளிப் போனால் வரும் திருமழிசை மாதிரி பகுதிகளுக்கோ... அல்லது தாம்பரத்துக்கு அந்தப் பக்கம் உள்ள ஏரியாக்களுக்கோ போய் வந்தவர்கள் நிச்சயம வாயைத் திறக்க மாட்டார்கள்.
ஒரு தொழிற்பேட்டையே செத்துப் போச்சு
திருமழிசையில் ஒரு தொழிற்பேட்டை கூட உள்ளது. ஆனால் தொடர்சசியான மின்வெட்டு, அந்த தொழிற்பேட்டையையே காலிசெய்துவிட்டதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
குடிக்கக் கூட தண்ணீர் இல்லைங்க
திருப்பத்தூர் பக்கத்தில் உள்ள கிராமங்களில் 18 மணி நேரம் வரை மின்சாரம் கிடையாது. குடிக்க தண்ணீர் கூட கிடைக்காத நிலை. கிணற்றில் இறைத்துக் கொள்ளலாம் என்றாலும் முடியாது. காரணம் எல்லாம் 500 அடிக்கு மேல் ஆழ்துளைக் கிணறுகள். ஆறு, குளம், ஏரி என எல்லாம வறண்ட இந்த மாவட்டத்துக்கு, மின்சார வாரியம் இரவு 11 மணிக்கு மேல் 3 பேஸ் மின்சாரம் தருகிறது. அதுவும் மூன்று மணிநேரம் மட்டுமே. இந்த 3 பேஸ் மின்சாரம் இருந்தால்தான் பம்ப்செட் ஓடும் என்பது புரியுமல்லவா...
ஆந்திரா பக்கம் ஓடிட்டாங்களோ...
2010-2011-ல் 3 முதல் 4 மணிநேரம் மின்சாரம் இல்லாத நிலை. அதற்கு அறிவுஜீவிகள் என்று கூறிக் கொண்டவர்களும், நடுநிலை முகமூடி போட்டவர்களும் அடித்த கூத்து இருக்கிறதே... அவர்களை தேடு தேடு என்று தேடினாலும் இன்று கிடைத்தபாடில்லை! அதுவும் கோயமுத்தூரில் தொழில்கள் போயே போச்சு என ஒப்பாரி வைத்த ஒருவரைக் கூட இன்று காணவில்லை. ஒருவேளை ஆந்திரா பக்கம் ஓடிப் போயிருப்பார்களோ!
ஆர்க்காட்டாரே மன்னிச்சுடுங்க
இதெல்லாம் இப்போது புரிந்ததாலோ என்னமோ.. தமிழக மக்கள் சார்பில் முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமிக்கு பெரிய பேனர் வைத்து மன்னிப்பு கேட்க ஆரம்பித்துள்ளனர் தமிழக மக்கள். திருச்சியில் பெரிய கட்அவுட்டே வைத்திருக்கிறார்கள். தமிழகத்தின் இன்றைய நிலையைச் சொல்ல இதைவிட உதாரணம் இருக்கிறதா!!