தெருவில் நின்று ஆண்களுடன் பேசியது தப்பாம்.. 15 வயது சிறுமிக்கு 60 சவுக்கடி!
திம்புக்டு, மாலி: தெருவில் நின்று ஆண்களுடன் பேசியதற்காக 15 வயது சிறுமிக்கு 60 சவுக்கடி கொடுத்து கொடுமையான தண்டனையை நிறைவேற்றியுள்ளனர் மாலியின் திம்புக்டு நகரில் உள்ள மதப் பழமைவாதிகள்.
அந்தச் சிறுமி சவுக்கடி காரணமாக கடுமையான காயத்திற்குள்ளாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. வடக்கு மாலியில் உள்ள திம்புக்டு உள்ளிட்ட பல பகுதிகளில் இஸ்லாமிய ஆயுதம் தாங்கிய அமைப்பான அன்சர் டைன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
சம்பவத்தன்று அந்தச் சிறுமி தெருவில் நின்று சில ஆண்களுடன் பேசியுள்ளார். இதையடுத்து அந்த சிறுமியை விசாரணைக்குட்படுத்தினர். பின்னர் அவருக்கு 60 சவுக்கடி கொடுக்க உத்தரவிட்டனர் அந்த அமைப்பின் நிர்வாகிகள்.
அதன் பின்னர் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனால் அந்தச் சிறுமி கடும் காயமடைந்தார். நகரின் மையப் பகுதியில் வைத்து பொதுமக்கள் முன்னிலையில் அந்த சிறுமியை சவுக்கால் அடித்தனர். ஆனால் பெருமளவில் மக்கள் இதைப் பார்க்க வரவில்லை. இதனால் இஸ்லாமிய அமைப்பு கடும் கோபமடைந்துள்ளதாம்.
அன்சார் டைன் என்பதன் அர்த்தம் நம்பிக்கையின் காவலர்கள் என்பது. இது அல் கொய்தா அமைப்புடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது. மாலியில் ராணுவப் புரட்சி கடந்த மார்ச் மாதம் நடந்தது. அதைப் பயன்படுத்தி திம்புக்டு நகரை அன்சார் டைன் கைப்பற்றிக் கொண்டு காட்டு ராஜ்ஜியம் நடத்தி வருகிறது.
தனது பிரதேசம் முழுவதும் கடுமையான சட்டவிதிகளையும், கட்டுப்பாடுகளையும் இந்த அமைப்பு அமல்படுத்தி வருகிறது. இதனால் மக்கள், குறிப்பாக பெண்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.