சத்யம்' ராமலிங்க ராஜுவின் ரூ.822 கோடி பணத்தை முடக்கியது அமலாக்கப் பிரிவு
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தை நிறுவியவர் ராமலிங்க ராஜு. ஆனால், பின்னர் கட்டுமானம் உள்ளிட்ட பிற துறைகளில் முதலீடு செய்ய ஆரம்பித்தார். இதற்காக சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தை பணத்தையே கையாடல் செய்ய ஆரம்பித்தார்.
சத்யம் நிறுவனத்தின் பங்குகளை வேண்டுமென்றே உயர்த்தியும், விலை உயர்ந்த பங்குகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தும், அடமானம் வைத்தும் பல்லாயிரம் கோடி மோசடி செய்தார்.
ஆனால், சத்யம் நிறுவனத்தின் வரவு-செலவு கணக்கில் இந்த விவரங்களை மறைத்தும், சர்வதேச ஆடிட்டர்களுக்கும் லஞ்சம் தந்து தவறான கணக்குகளைக் காட்டியும் முதலீட்டாளர்களை ஏமாற்றி வந்தார்.
பல ஆண்டுகளாக இவர் இந்த வேலையைச் செய்து வந்தாலும் 2008ம் ஆண்டு டிசம்பரில் தான் விவகாரம் வெளியில் வந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனமே நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகும் நிலையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மத்திய அரசு தலையிட்டு நிறுவனத்தை ராஜு அண்ட் கோவிடம் இருந்து மீட்டு, சில நடுநிலையான நபர்களை நியமித்து அதை நடத்தியது.
அதில் நடந்த முறைகேடுகளை முழுமையாக ஆராய்ந்த பின்னர் சத்யம் நிறுவனம் விற்கப்பட்டது. அதை மஹிந்திரா நிறுவனம் கையகப்படுத்தி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இதன்மூலம் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய லட்சக்கணக்கான ஊழியர்களும், அதில் முதலீடு செய்த லட்சக்கணக்கான பொது மக்களும், சத்யம் நிறுவனத்துக்கு ஆர்டர்களைத் தந்த கிளையன்டுகளும் தப்பினர்.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ராஜு சில காலம் சிறையில் இருந்தார். பின்னர் உடல்நிலையைக் காரணம் காட்டி வருடக்கணக்கில் மருத்துவமனையிலேயே நாட்களைக் கழித்து சிறைவாசத்திலிருந்து தப்பிவிட்டார்.
முறைகேடு தொடர்பாக ராமலிங்க ராஜு மீது அன்னியச் செலாவணி மோசடி வழக்கை பதிவு செய்த அமலாக்கப் பிரிவு அந்த விசாரணையை தொடர்ந்து வருகிறது.
இந் நிலையில் ராஜுவுக்குச் சொந்தமான ரூ. 822 கோடி டெபாசிட்களை அமலாக்கப் பிரிவு முடக்கியுள்ளது. ஆந்திரா வங்கி, பரோடா வங்கி, ஐடிபிஐ வங்கி, ஐஎன்ஜி வைஸ்யா வங்கி ஆகியவற்றில் இந்தப் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.
இப்போது முடக்கப்பட்டுவிட்ட இந்தப் ரூ.822 கோடி பணத்தை இனி ராஜுவோ அவரது குடும்ப உறுப்பினர்களோ அனுபவிக்க முடியாது.
இது தொடர்பான வழக்கின் தீர்ப்புக்குப் பிறகே இந்தப் பணம் அவர்களுக்குத் திரும்பக் கிடைக்குமா இல்லையா என்பது தெரியவரும்.
ஏற்கெனவே இந்த மோசடி தொடர்பாக ராஜுவின் 354 சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ. 250 கோடியாகும்.