ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அரசிதழ் பதிவு பெறாத தகுதி வாய்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் உற்பத்தி சார்ந்த போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இது ஆண்டுதோறும் ஆயுத பூஜை, தசரா விடுமுறைக்கு முன்பாக வழங்கப்படுவது வழக்கம்.
இதேபோல இந்த ஆண்டு ரயில்வே ஊழியர்களின் 80 நாள் சம்பளத்தை போனஸாக வழங்க வேண்டும் என்று ரயில்வே சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இது குறித்து ரயில்வே அமைச்சர் சி.பி.ஜோஷிக்கு, ரயில்வே சங்கங்கள் கடிதம் எழுதி இருந்தன.
இந் நிலையில் இது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன்முடிவில் அரசிதழ் பதிவு பெறாத தகுதி வாய்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளத்தை போனஸாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது குறித்து அரசு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
அரசிதழ் பதிவு பெறாத ரயில்வே ஊழியர்களின் மாத சம்பளம் ரூ.3,500 என்று உச்சவரம்பு கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் 78 நாள் சம்பளம் போனஸாக வழங்கப்படும். இதன்மூலம் மத்திய அரசுக்கு ரூ.1021.56 கோடி செலவாகும். இந்த போனஸின் மூலம் 12.37 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பலன் அடைவார்கள். ஆயுத பூஜை விடுமுறைக்கு முன்பாக இந்த போனஸ் வழங்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.