தப்புதான், தப்புதான், 'ஞான்' கூடங்குளம் போனது தப்புதான்... அச்சுதானந்தன்
கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தை இடதுசாரி கட்சிகள் ஆதரிக்கவில்லை. இந்த நிலையில் கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான அச்சுதானந்தன், நான் கூடங்குளம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்து ஆதரவு தருவேன். கட்சி நிலைப்பாடு குறித்து எனக்குக் கவலை இல்லை என்று அறிவித்தார்.
மேலும் அவர் கூடங்குளத்திற்கும் தனது ஆதரவாளர்களோடு கிளம்பியும் வந்தார். ஆனால் போலீஸார் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டனர்.
இந்த நிலையில் சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி தனிக் கட்சி நடத்தி வந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் படுகொலை செய்யப்பட்ட சந்திரசேகரனின் வீட்டுக்குச் சென்று இரங்கல் செலுத்தினார். இதனால் கட்சி மேலிடம் மேலும் அதிருப்தி அடைந்தது. அச்சுதானந்தனைக் கடுமையாகவும் கண்டித்தது.
இந்த நிலையில் நேற்று தனது குரலை மாற்றிப் பேசினார் அச்சுதானந்தன். இதுகுறித்து அவர் கூறுகையில்,
இந்தியா, ரஷியா இணைந்து செயல்படுத்துகிற கூடங்குளம் அணுமின்திட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கிறது. ஆனால் நான் கட்சி நிலைப்பாட்டுக்கு மாறாக, அணுமின்நிலைய எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக கூடங்குளம் சென்றது தவறுதான்.
1964-ம் ஆண்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பிளவுக்கு காரணமான டாங்கேயுடன் மாநில கட்சி செயலாளர் பினரயி விஜயனை ஒப்பிட்டு கூறியதும் தவறுதான். நான் கட்சி ரீதியில் செய்த தவறுகளை ஒத்துக்கொள்கிறேன்.
கட்சியிலிருந்து வெளியேறி புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி என்ற தனிக்கட்சி தொடங்கிய சிறிது காலத்தில் டி.பி.சந்திரசேகரன் கொலை செய்யப்பட்டார். நெய்யாற்றின்கரை சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடந்த நாளில் நான் சந்திரசேகரனின் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த சென்றதும் தவறுதான் என்று தான் செய்தது எல்லாமே தப்பு, தப்பு, தப்பு என்று மூன்று முறை அச்சுதானந்தன் கூறியதால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.