தீபாவளி பண்டிகை: பயணிகள் நெரிசலை தவிர்க்க 1,000 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு
சென்னை: தீபாவளி பண்டிகையின் போது பஸ்களில் ஏற்படும் பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில் 1,000 சிறப்பு பஸ்களை இயக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தீர்மானித்துள்ளது.
அடுத்த மாதம்(நவம்பர்) 13ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அப்போது சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகம். இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது. கோவை செல்லும் ரயில்களும், கேரளா செல்லக்கூடிய ரயில்களிலும் இடமில்லை. சிறப்பு ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது 60 நாட்களுக்கு முன்னதாக விரைவு பஸ்களில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்பட்டதால், பொதுமக்கள் ஆன்லைன் மூலமும், டிக்கெட் கவுண்டர் மூலமும் முன்பதிவு செய்து வருகிறார்கள். விரைவு பஸ்களிலும் முன்பதிவு பெரும்பாலும் முடிந்துவிட்டது.
இதனால் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் இடையே நெரிசலை தவிர்க்கும் வகையில் 1,000 சிறப்பு பஸ்களை இயக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து அரசு போக்குவரத்து கழக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது,
முதல்வரின் நடவடிக்கையின் மூலம் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 500 பஸ்கள் கிடைத்துள்ளது. இதனால் சேதமடைந்த நிலையில் இருந்த பழைய பஸ்கள் இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 30 புதிய வழித்தடங்களிலும் விரைவு பஸ்கள் இயக்கப்படுகிறது. பஸ்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஊருக்கு சென்று சேர்ந்துவிடுகிறது. இதனால் பயணிகள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மொத்தம் 1046 பஸ்கள் உள்ளன. மேலும் 100 மாற்று பஸ்கள் உள்ளன. இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு விரைவு போக்குவரத்து கழகம் தவிர ஏனைய விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை அரசு போக்குவரத்து கழகங்களை சேர்த்து மொத்தம் 1000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
300 கி.மீ தூரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மற்ற அரசு பஸ்களும், 300 கி.மீ தூரத்திற்கு அதிகமாக உள்ள பகுதிகளுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களும் இயக்கப்படும் என்றார்.
சென்னையில் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், சென்னையி்ல் இருந்து அதிகளவில் சிறப்பு பஸ்களை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் தீபாவளி பண்டிகையின் போது எந்த வழித்தடத்தில் பயணிகளின் நெரிசல் அதிகமாக உள்ளதோ, அதில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.