கும்பகோணம் வங்கியில் ரூ.13 கோடி கடன் மோசடி: 9 இடங்களில் சிபிஐ ரெய்ட்!
சென்னை: கும்பகோணம் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் நடந்த ரூ.13 கோடி கடன் மோசடி வழக்கில் சிபிஐ அதிகாரிகள் சென்னை உள்பட 9 இடங்களில் சோதனை நடத்தினர்.
கும்பகோணத்தில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் உரிய சொத்து ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு ரூ.13 கோடி வரை கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கடன் திருப்பிச் செலுத்தப்படாததால் வங்கிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
இந்த கடன் மோசடிக்கு வங்கி அதிகாரிகள் சிலரும் துணை போய் இருப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணையில் சபரிநாதன் என்ற வங்கி அதிகாரி தான் இந்த கடன் கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் என்று தெரியவந்துள்ளது.
இந் நிலையில் நேற்று சென்னை, கும்பகோணம், திருச்சி, கோவை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய நகர்களில் 9 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
சென்னை சாலிகிராமம் ராஜாஜி காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் சாகுல் அமீது என்பவரின் வீட்டிலும் சோதனை நடந்தது.