மதுரை ஆதீனத்திலிருந்து நித்தியின் ஆதரவாளர்கள் வெளியேறினர்.. மடத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
மதுரை: மதுரை ஆதீனத்தில் இருந்து நித்யானந்தா நீக்கப்பட்டதையடுத்து நேற்றிரவே அவரது சீடர்களும் ஆதீன மடத்திலிருந்து வெளியேறிவிட்டனர்.
நித்யானந்தாவின் ஆதரவாளர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அருணகிரிநாதர் கூறியுள்ளதால், ஆதீன மடத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
நேற்றிரவு நித்தியானந்தாவின் சீடர்கள் வரிசையாக வெளியேறத் தொடங்கிய நிலையில், நித்தியானந்தாவின் உதவியாளர் ஞானசொரூபானந்தாவும் வெளியே வந்தார். நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
மதுரை ஆதீனகர்த்தர் அருணகிரிநாதர் எங்களிடம், எனக்கு சட்ட நெருக்கடி அதிகமாக இருப்பதால் நித்தியானந்தாவை நீக்குகிறேன். அதனால் நீங்கள் உடனடியாக மடத்திலிருந்து புறப்படுங்கள் என்று கூறினார்.
உடனே நாங்கள் திருவண்ணாமலையில் உள்ள நித்தியானந்தாவை தொடர்பு கொண்டு அது குறித்து கேட்டோம். அப்போது நித்தியானந்தர் எங்களிடம், அருணகிரிநாதர் மன உளைச்சலில் இருக்கிறார். அவர் என்ன சொல்கிறாரோ அதை கேளுங்கள் என்றார். அதன்படி நாங்கள் கிளம்பிவிட்டோம். இப்போது திருவண்ணாமலைக்கு புறப்பட்டுச் செல்கிறோம் என்றார்.
ஆனால், உங்களைப் போன்ற நித்யானந்தா சீடர்களால் தனது உயிருக்கு ஆபத்து வரலாம் என்று போலீஸில் அருணகிரிநாதர் புகார் தந்துள்ளாரே என்று கேட்டதற்கு பதிலளித்த ஞானசொரூபானந்தா,
அருணகிரிநாதருக்கு தெரியாமல் அவரது வழக்கறிஞர் அந்தப் புகாரைக் கொடுத்திருக்கலாம். அதைப்பற்றி எங்களுக்குத் தெரியாது. இந்த ஆதீனத்தில் என்னுடன் 7 பேர் இருந்தனர். இப்போது 5 பேர் வெளியேறுகிறோம். இன்னும் 2 பேர் இங்கேயே இருப்பர். நித்தியானந்தா மீது போலீசில் அளித்த புகார் சம்மந்தமாக எங்களுக்கு எதுவும் தெரியாது என்றார்.
உஷ்... அப்பப்பா!!