சேது சமுத்திர திட்டத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்குமாம்: சொல்கிறார் ஜி.கே.வாசன்
திருச்சி: தென் மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவான சேது சமுத்திர திட்டம் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும். எனவே இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருச்சிக்கு நேற்று வந்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன், மறைந்த முன்னாள் எம்.பி.அடைக்கலராஜின் வீட்டுக்கு சென்று அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது ஜி.கே.வாசன் கூறியதாவது,
தமிழகத்தில் மின் பற்றாக்குறை தான் முக்கிய பிரச்னையாக உள்ளது. இதற்கு காரணம் என்ன என்பதை அனைத்து தரப்பு மக்களும் 100 சதவீதம் உணர்ந்துள்ளனர். எனவே கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் உண்மை நிலையை புரிந்து கொண்டு, போராட்டத்தை கைவிட வேண்டும்.
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்க, கூடங்குளம் அணு உலை எந்த அளவுக்கு முக்கியம் என்பது அப்பகுதி மக்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்து வருகிறது. தமிழக அரசும், பிற கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கூடங்குளம் அணு உலையை திறக்கவும், மின்வெட்டை போக்கவும் மத்திய அரசுக்கு, மாநில அரசு துணை நிற்க வேண்டும். மின்வெட்டுக்கு காரணம் என்ன, காரணமானவர்கள் யார்? என்பதை தமிழக மக்கள் நன்கு அறிந்து மதிப்பீடு செய்து வைத்துள்ளனர்.
சேது சமுத்திர திட்டம், தென் மாவட்ட மக்களின் நீண்டகால கனவு திட்டமாகும். இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும். இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.