குழந்தையை திருடிவிட்டு விஷ ஊசி போட்டுவிடுவதாக மிரட்டல்: அரசு டாக்டர், நர்ஸ் மீது புகார்!
சென்னை புது வண்ணாரப்பேட்டை, தேசிகா நகர், 5-வது தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 24). மீனவரான இவருக்கு மேனகா (23) என்ற மனைவியும் காவியா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
மேனகாவிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆண்குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தையை எடுத்துக் கொண்டு, மேனகாவும், அவரது கணவர் பிரவீன்குமாரும் வெள்ளிக்கிழமையன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார் ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.
நான் 2-வதாக கர்ப்பம் தரித்தவுடன், ராயபுரம் மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்து பார்த்தேன். அப்போது வயிற்றில் 2 குழந்தைகள் இருப்பதாக கூறினார்கள். பிரசவம் ஆனபோதும்,பிரசவம் பார்த்த பெண் டாக்டரும், நர்சுகளும் எனக்கு 2 ஆண்குழந்தைகள் பிறந்துள்ளதாக சொல்லி, 2 ஆண் குழந்தைகளையும் என்னிடம் தூக்கி காண்பித்தார்கள். அதன் பிறகு 2 ஆண் குழந்தைகளும் எடை குறைவாக இருப்பதாக கூறி, இன்குபேட்டரில் வைத்தனர்.
விஷ ஊசி போடுவதாக மிரட்டல்
சுகப்பிரசவம் நடந்தால் 2 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்துவிடுவார்கள். ஆனால் என்னை 8 நாட்கள் கழித்துதான் தன்னை டிஸ்சார்ஜ் செய்தனர்.
டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன்பே எனக்கு பிரசவம் பார்த்த பெண் டாக்டரும், நர்சும் எனக்கு 2 ஆண்குழந்தைகள் பிறக்கவில்லை என்றும், ஒரு ஆண்குழந்தைதான் பிறந்தது என்றும், சொன்னார்கள். நான் அதை ஏற்க மறுத்து சண்டை போட்டேன். ஒரு குழந்தையை வாங்கிக் கொண்டு போகாவிட்டால் விஷ ஊசி போட்டு உன்னை கொன்றுவிடுவோம் என்று மிரட்டினார்கள்.
குழந்தையை திருடிவிட்டனர்
பயந்து போன என்னால் அப்போது ஒன்றும் செய்ய முடியவில்லை. எனது கணவர் மற்றும் தாயாரையும் மிரட்டிவிட்டனர். இப்போது ஒரு டாக்டர் கொடுத்த தைரியத்தில்தான் புகார் கொடுத்துள்ளேன். எனது இன்னொரு குழந்தையை திருடி விற்றுவிட்டார்கள் என்று கருதுகிறேன். ஸ்கேன் எடுத்து பார்த்த ரிப்போர்ட் உள்ளது.
என்னை மிரட்டி, குழந்தை திருட்டுக்கு காரணமாக இருந்த ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரி டாக்டர் மற்றும் நர்சு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காணாமல் போன எனது மற்றொரு குழந்தையை மீட்டுத்தரவேண்டும் இவ்வாறு அந்த மனுவில் மேனகா கூறியுள்ளார்.