செம்மண் கொள்ளை: பொன்முடியின் வீடுகள் உள்ளிட்ட 11 இடங்களில் போலீஸ் சோதனை
விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மண் எடுத்தார் பொன்முடி என்பது புகார். இந்தப் புகாரின் அடிப்படையில் பொன்முடி, அவரது மகன் தெய்வசிகாமணி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது., இந்த வழக்கில் பொன்முடி தமது மகனுடன் ஓடிப் போய் தலைமறைவாக இருந்து வந்தார். அவரது முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் வேறுவழியின்றி வெளியே வர போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது திருச்சி சிறையில் பொன்முடி அடைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் பொன்முடியின் மகன் தெய்வசிகாமணி தொடர்ந்தும் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை விழுப்புரம் மற்றும் சென்னையில் உள்ள பொன்முடியின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட 11 இடங்களின் பொன்முடியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். செம்மண் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்முடியின் கூட்டாளி குமார் வீட்டிலும் போலீசார் இன்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.