நகை கடையை திறந்து வைக்க கேரளாவிற்கு வந்த கால்பந்து வீரர் மாரடோனா- ரசிகர்கள் உற்சாகம்
மலப்புரம்: கேரளாவில் ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்களுக்கு உற்சாகப்படுத்தும் வகையில், பிரபல கால்பந்து வீரர் மாரடோனா கேரளாவிற்கு 2 நாள் பயணமாக வந்துள்ளார். நகை கடை ஒன்றை திறந்து வைப்பதற்காக அவர் கேரளாவிற்கு வந்துள்ளார்.
அர்ஜென்டினா கால்பந்து அணியை சேர்ந்த பிரபல வீரர் மாரடோனா(51). கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு, இப்போதும் உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவில் அதிக கால்பந்து ரசிகர்களை கொண்ட மாநிலங்களில் கேரளாவும் ஒன்று.
பல ஆண்டுகளாக மாரடோனாவை டிவிகளில் மட்டுமே கண்டு வந்த கேரள ரசிகர்களுக்கு, தற்போது அவரை நேரடியாக காணும் வாய்ப்பு கிடைத்தது.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் போபி செம்மண்ணூர் சர்வதேச ஜூவல்லாரி நகை கடையை திறந்து வைக்க, 2 நாள் சுற்றுப்பயணமாக மாரடோனா கேரளாவிற்கு வந்துள்ளார். இன்று கொச்சியில் உள்ள நெடும்பாசேரி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய மாரடோனாவை காண, கேரளாவின் பல பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கூடியிருந்தனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த மாரடோனா, காத்திருந்த ரசிகர்களை நோக்கி கைகளை அசைத்தார்.
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த மாரடோனாவிற்கு, ரசிகர்கள் தரப்பில் கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரளாவில் அதிக கால்பந்து ரசிகர்களை கொண்ட கோழிக்கோடு, மாலப்புரம், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் வரவேற்பு தட்டிகள், பேனர்கள் ஆகியவை வைக்கப்பட்டு, திருவிழா போல காணப்பட்டது. நாளை நடைபெற உள்ள நகை கடை திறப்பு விழாவில், மாரடோனா கலந்து கொள்ள உள்ளார்.
இதனால் கேரளா மாநிலத்தின் பல பகுதிகளை சேர்ந்த கால்பந்து ரசிகர்களும் கண்ணூர் மாவடத்தில் வந்து குவிந்து வருகின்றனர். நாளை நடைபெற உள்ள திறப்பு விழாவில் 2 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் கண்ணூர் மாவட்டத்தில் ஹோட்டல்கள், லாட்ஜ்கள் ஆகியவை 'ஹவுஸ் புல்'லாக உள்ளன.
இதையடுத்து நாளை விழாவை பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து பாதிப்பை தவிர்க்கும் வகையில், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1986ம் ஆண்டு அர்ஜென்டினா அணியை வழிநடத்திய மாரடோனா, உலக கோப்பை பெற்று தந்தார். பந்தை திறமையாக எதிரணியினரிடம் இருந்து பறிக்கும் திறமை கொண்ட மாரடோனா, 20ம் நூற்றாண்டின் சிறந்த பிபா விருதை பெற்றவர்.
கடந்த 2008ம் ஆண்டு கொல்கத்தாவிற்கு வருகை தந்த மாரடோனாவிற்கு, ரசிகர்கள் பலத்த வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.