உழைப்பின் உன்னதத்தை அறியும் நாள் ஆயுத பூஜை திருநாள்: ஜெயலலிதா வாழ்த்து
இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ஆயுதபூஜை வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
நவராத்திரி எனப்படும் 9 திருநாட்களின் இறுதியில் 9வது நாளான ஆயுதபூஜை மற்றும் 10வது நாளான விஜயதசமி திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழக மக்களுக்கு எனது உள்ளம் கனிந்த இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
அழிவில்லாத சிறந்த கல்வி செல்வத்தை அளிக்கிற கலைமகளையும், மனத்திட்பத்தோடு துணிவையும் தரும் மலைமகளையும், செல்வங்களை அள்ளித் தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு அம்சமாகும். அயராத உழைப்பினால் கிட்டும் வெற்றியை பூஜிக்கும் திருநாளாக விஜயதசமி திருநாளை மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து, செய்யும் தொழிலை தெய்வமாக மதித்து, அன்னை பராசக்தியின் அருளை வேண்டி தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடியில் படைத்து வழிபடும் நாள் ஆயுதபூஜை திருநாள் ஆகும். ஊக்கமுடன் கூடிய உழைப்பே, வறுமையை அகற்றி, செல்வத்தைப் பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்கும் என்பதை உணர்த்தும் திருநாளாக இந்தப் பண்டிகை விளங்குகிறது.
இந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவரும், அனைத்து வளமும், நலமும் ஒருங்கே பெற்று சீரோடும் சிறப்போடும் சிறந்து விளங்கிட எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கி கொள்கிறேன் என்ற அந்த வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுனர் ரோசைய்யா வாழ்த்து:
இது குறித்து தமிழக ஆளுனர் ரோசைய்யா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,
மங்களகரமான விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை இந்திய மக்களுக்கும், குறிப்பாக தமிழக மக்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன். விஜயதசமி என்ற தசரா பண்டிகை நமக்கு, தீமைகள் மீது வெற்றியை தந்து, அறியாமை என்ற இருளை நீக்கி, அறிவையும், ஞானத்தையும் அனைத்து துறைகளிலும் கிடைக்க செய்து, அதன்மூலம் வாழ்க்கையில் அபிவிருத்தி ஏற்பட்டு, தேசத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு வாழ்த்துகிறேன் என்று அந்த வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.