மாரடோனாவை கண்ட கொண்டாட்டம்- கூட்ட நெரிசலில் ரசிகர் பலி
அர்ஜென்டினா கால்பந்து அணியின் புகழ்பெற்ற வீரராக ஜொலித்தவர் மாரடோனா (51). தற்போது கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால் அவரது புகழ் இன்னும் குறையவில்லை. உலகமெங்கும் இப்போதும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவில் அதிலும் கேரளாவில் மாரடோனாவிற்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள ஒரு நகை கடை திறப்பு விழாவிற்கு மாரடோனா வந்திருந்தார். கடந்த 23ம் தேதி விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய, மாரடோனாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பிறகு தனி விமானம் மூலம் கொச்சியில் இருந்து கண்ணூர் சென்றார். கேரள கால்பந்து ரசிகர்களை தனது அற்புதமான ஆட்டத்தால் கட்டி போட்டிருந்த மாரடோனாவிற்கு வழி நெடுக்கிலும் வரவேற்பு தட்டிகள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
கண்ணூரில் மாரடோனா தங்கியிருந்த ஹோட்டலை சுற்றிலும், அவரை காண ரசிகர்கள் திரண்டனர். இதையடுத்து ரசிகர்களை நோக்கி மாரடோனா கையை அசைத்து காட்டினார். மாரடோனா வருகையை முன்னிட்டு கோழிக்கோடு, மலப்புரம், காசர்கோடு ஆகிய மாவட்டங்கள் திருவிழா கோலம் பூண்டிருந்தது.
நேற்று காலை 11 மணிக்கு கண்ணூர் நகராட்சி ஜவஹர் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாரடோனா, ரசிகர்களின் முன்னிலையில் தோன்றினார். அவர் மைதானத்திற்குள் நுழைந்தது முதல் ரசிகர்களின் கைதட்டல் விண்ணை பிளந்தது. சுமார் 50 ஆயிரம் பேர் அமர வசதி கொண்ட மைதானம் ரசிகர்களை கொண்டு நிரம்பி வழிந்தது.
ரசிகர்களை கண்டு உற்சாகமடைந்த மாரடோனா, மேடையில் தனக்கே உரிய பாணியில் கால்பந்தை உதைத்தும், தலையால் தட்டியும், பந்தை கட்டுப்படுத்தி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
கால்பந்தை ரசிகர்களை நோக்கி அடித்து மகிழ்ந்த மாரடோனா நடனமாடி, பாட்டும் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் ரசிகர்களிடம் பேசிய மாரடோனா, இந்தியாவையும், கேரளாவை நான் நேசிக்கிறேன் என்றார்.
வரும் 30ம் தேதி தனது 52வது பிறந்தநாளை கொண்டாட உள்ள மாரடோனாவை உற்சாகப்படுத்தும் வகையில், அவருக்கு கால்பந்து மைதானம் வடிவத்தில் கேக் பரிசளிக்கப்பட்டது. இதை அவர் வெட்டினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய கால்பந்து வீரர் ஐ.எம்.விஜயன், கேரள உள்துறை அமைச்சர் ராதா கிருஷ்ணன், விளையாட்டு அமைச்சர் கணேஷ் குமார் உள்பட பலரும் கலந்து கொண்டனர். மாரடோனாவின் வருகையை முன்னிட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
தள்ளுமுள்ளு-ரசிகர் மரணம்:
கேரளாவிற்கு வந்த மாரடோனாவை காணும் ஆசையில் மைதானத்திற்கு வந்த ரசிகர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தார்.
கேரளாவிற்கு வந்த மாரடோனாவை காணும் ஆசையில் ஜவஹர் மைதானத்திற்கு பையனூரை சேர்ந்த வந்த சுபாஷ்(37) என்ற ரசிகர் வந்திருந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கினார். சிறிது நேரத்தில் சுபாஷ் திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்தார்.
அவரை மீட்ட நண்பர்கள், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பணியாற்றும் நர்சுகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், அவரை மருத்துவமனையில் சேர்க்க முடியவில்லை. இந்த நிலையில் அங்கிருந்த 100 கி.மீ தொலைவில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.