குடும்ப தகராறு: கோவையில் மகனுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெற்றோர் தற்கொலை
கோவை: கோவையில் குடும்ப தகராறு காரணமாக 7 வயது சிறுவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெற்றோர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் உள்ள சரவணா நகரை சேர்ந்தவர் பரமசிவம்(36). கால்டாக்ஸி ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவர் மோகனவள்ளி(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நவீன்குமார்(7) என்ற மகன் உள்ளார். நவீன்குமார் அதேபகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 2ம் வகுப்பு படித்து வந்தார்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட பரமசிவம், குடும்பத்தை நடத்தி செல்ல முடியாமல் அவதிப்பட்டார். அவர் ஒருவரின் வருமானம் குடும்ப செலவிற்கு போதாமல் போகவே, பலரிடமும் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தினார். கணவனின் குடும்ப பாரத்தை குறைக்க மோகனவள்ளியும் வேலைக்கு செல்ல விருப்பம் தெரிவித்தார்.
ஆனால் இதற்கு பரமசிவம் மறுப்பு தெரிவித்தார். இதனால் அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் பரமசிவம் பணியாற்றி வந்த கால்டாக்ஸி நிறுவனத்தினர் வேலைக்கு வரும்படி செல்போனில் அழைத்தனர். ஆனால் யாரும் செல்போனை எடுக்கவில்லை.
இதனால் அவரது பக்கத்து வீட்டாருக்கு அழைத்த கால்டாக்ஸி நிறுவனத்தினர், பரமசிவத்தை வேலைக்கு வரும்படி தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். அவர்கள் பரமசிவத்தின் வீட்டு கதவை தட்டி பார்த்தும், கதவு திறக்கவில்லை. எனவே சந்தேகமடைந்த பக்கத்து வீட்டார், வீட்டு ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்தனர்.
அப்போது வீட்டிற்குள் பரமசிவம் மின்விசிறியில் தூக்கு போக்கு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அவரது மனைவியும், மகனும் தரையில் பிணமாக கிடந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டு கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றனர். அப்போது 3 பேரும் இறந்த கிடந்தது தெரிந்தது. கடன் தொல்லை மற்றும் குடும்ப தகராறு காரணமாக மகன் நவீன்குமாருக்கு பிஸ்கட்டில் விஷம் வைத்து பெற்றோர் கொலை செய்துள்ளனர்.
அதன்பிறகு மோகனவள்ளி தனது துப்பட்டாவினால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்த பரமசிவம், மனைவியின் உடலை கீழே இறக்கி மகன் அருகே படுக்க வைத்துவிட்டு, தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
3 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட பரமசிவத்தின் சட்டை பாக்கெட்டில் இருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் அவர் எழுதியிருந்ததாவது,
நானே தேடி கொண்ட வாழ்க்கையை நானே முடித்து கொள்கிறேன். எங்களின் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நாங்களாக எடுத்த முடிவு இது. உன்னிடம் (மோகனவள்ளி) முதன் முதலாக காதலை சொன்னது நான்தான். நீ இறந்த பிறகு நான் உயிரோடு இருக்க முடியாது. என்னை பிரிந்து நீயும் இருக்க முடியாது. நான் தொடங்கி வைத்ததை நானே முடிக்கிறேன். 3 பேரின் உடல்களையும் ஒரே குழியில் புதைத்து விடுங்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியர், பெற்ற மகனை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.