டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் ரத்த தானம் செய்வார்கள்: தொல்.திருமாவளவன்
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தாக்கி உடல்நலம் குன்றிய நோயாளிகளுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரத்த தானம் செய்ய தயாராக உள்ளதாக, அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் இப்போது டெங்கு காய்ச்சல் என்பது மிகப்பெரிய சுகாதார பிரச்சனையாக மாறி இருக்கிறது. டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழிக்கிறது என்பதால் இந்த நோயால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு உள்ளுக்குள் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.
எனவே தமிழக அரசு டெங்கு வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் இருக்கும் தாலுக்கா அளவிலான அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் போர்க்கால அடிப்படையில் ரத்த வங்கி மற்றும் ரத்தத்தில் இருந்து தட்டணுக்களைப் பிரித்தெடுக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவசரமாக ரத்தம் தேவைப்படுகிறவர்களுக்கு ஆங்காங்கே இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் ரத்த தானம் அளிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். எனவே தொடர்புடைய சுகாதாரத்துறை அலுவலரையோ அல்லது அரசு மருத்துவமனைகளில் இருக்கும் தலைமை மருத்துவரையோ அணுகி தேவைப்பட்டால் ரத்த தானம் அளிக்க தயாராக இருக்கிறோம் என்ற தகவலை அளிக்குமாறு விடுதலை சிறுத்தைகளின் பொறுப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
அதேபோல பொதுமக்கள் இடையே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலும் விடுதலை சிறுத்தைகள் ஈடுபடுவார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.