இறைவனுக்காக தியாகம் செய்யும் எண்ணத்தை அளிக்கும் நாள் பக்ரீத்: முதல்வர் வாழ்த்து
சென்னை: இறைவனுக்கான எதையும் தியாகம் செய்யும் எண்ணத்தை வளர்த்து, ஏற்ற தாழ்வுகளை அகற்றி மக்கள் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடுவது பக்ரீத் பண்டிகை என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இஸ்லாமியப் பெருமக்கள் இறை நினைவோடும், தியாக சிந்தனையோடும், பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், எனது உள்ளம் கனிந்த பக்ரீத் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யும் எண்ணத்தை மேலோங்க செய்யும் நன்நாளாகவும், ஏற்றத் தாழ்வுகளை அகற்றி அனைவரும் ஒன்று கூடி இறைவனின் புகழை நெஞ்சத்தில் நிலைக்கச் செய்து, விருந்தளித்து மகிழ்ச்சியில் திளைக்கும் திருநாளாகவும் கொண்டாடப்படுவதே பக்ரீத் திருநாளாகும்.
இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப தன் ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த இறைத்தூதர் இப்ராஹிமின் தன்னலமற்ற தியாகத்தை உலகுக்கு உணர்த்தும் உன்னத நாளே இந்த திருநாள் ஆகும்.
நபிகள் நாயகம் போதித்த அன்பு, அமைதி, மனிதநேயம் தழைத்தோங்க, அனைவரும் அன்னாரின் உன்னதமான வழியை பின்பற்றி பாசமிக்க சகோதர, சகோதரிகளாய் மனவேறுபாடுகளை களைந்து ஒற்றுமையுடன் வாழ இந்த தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் உறுதி ஏற்போம்.
இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில் எல்லோரிடமும் இறை உணர்வும், தியாக சிந்தனையும், சகோதரத்துவமும் மலரட்டும். அது மனித குல நல்வாழ்விற்கு உன்னதமாய் வழி கோலட்டும் என்று வாழ்த்தி, மீண்டும் ஒரு முறை எனது பக்ரீத் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.