வீரபாண்டியாருடன் தேமுதிக எம்.எல்.ஏ. திடீர் சந்திப்பு... ஏன் ஏன் ஏன்?
தனது மகன் திருமண அழைப்பிதழைத் தருவதற்காக தான் சந்தித்துப் பேசியதாக அவர் கூறினாலும் அதையும் தாண்டி அரசியலும் பேசப்பட்டதாக சேலம் பக்கம் கிசுகிசுக்கிறார்கள்.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு வரை தனியாகவே போட்டியிட்டு வந்த கட்சி தேமுதிக. ஆனால் இப்படியே போய்க் கொண்டிருந்தால் போண்டியாகி விடுவோம் என்று கவலைப்பட்ட தேமுதிகவினர், அதிமுகவுடன் கூட்டணி வைக்க ஆசைப்பட்டனர். இதையடுத்து வேறு வழியில்லாமல் கட்சியையும், தொண்டர்களையும் தக்க வைத்துக் கொள்ள அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தார் விஜயகாந்த். ஆனாலும் இந்தக் கூட்டணி 6 மாதத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியலவில்லை. முறிந்து போய் விட்டது.
இந்த நிலையில் வரும் லோக்சபா தேர்தலில் தனியாகவே போட்டியிடுவோம் என விஜயகாந்த் கூறி வந்தாலும் திரைமறைவில் பலமான கூட்டணிக்கு அவர் அடிபோட்டு வருவதாகவே பேசப்படுகிறது. திமுக, பாஜக என சில கட்சிகளுடன் தேமுதிக தரப்பில் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் சேலம் வடக்கு தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ அழகாபுரம் மோகன்ராஜ் நேற்று வீரபாண்டியாரை சந்தித்துப் பேசியுள்ளார். இதுகுறித்து மோகன்ராஜ் கூறுகையில், மகனின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்தேன். கூட்டணி குறித்துப் பேசும் அளவிற்கு தேமுதிகவில் நான் ஒரு பெரிய நபர் கிடையாது, அதுபற்றி எதுவும் பேசவும் இல்லை என்றார்.
ஆனால் கூட்டணி தொடர்பான முக்கியப் பேச்சுவார்த்தைதான் நேற்று நடந்துள்ளதாக கிசுகிசுக்கிறார்கள். முக்கியஸ்தர்களை அனுப்பி பேசுவதை விட இப்படி சாதாரணமானவர்களை அனுப்பி பேசினால் சந்தேகம் வராது என்பதால்தான் மோகன்ராஜை கட்சி மேலிடம் வீரபாண்டியார் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.